பாய்லின் புயலில் சிக்கி, கடலில் மூழ்கிய பனாமா நாட்டுக் கப்பல்: 18 ஊழியர்கள் உயிருடன் மீட்பு
கொல்கத்தா: பாய்லின் புயலில் சிக்கி பனாமா நாட்டு சரக்குக் கப்பலொன்று மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகின்ற வேளையில், இன்று காலை அக்கப்பலில் பயணம் செய்த ஊழியர்கள் 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் பாய்லின் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா அருகே கரையைக் கடந்தது. கிட்டத்தட்ட 23 பேரை பலிவாங்கிய இந்தப் புயலினால் ஏற்பட்ட சேதாரங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்தப் புயலில் சிக்கிய பனாமா நாட்டு சரக்குக் கப்பலொன்று கடலில் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த 11ம் தேதி மேற்கு வங்கத் துறைமுகமான சாகரிலிருந்து சீனாவிற்கு புறப்பட்ட எம்.வி பிங்கோ என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கப்பலில் 8,000 டன் இரும்புத்தாதுவுடன், 19 சீன நாட்டவரும், ஒரு இந்தோனேசிய நாட்டவரும் இருந்துள்ளனர்.
ஒடிசாவின் பாலசோர் கடற்பகுதியிலிருந்து 25 கி.மீ தொலைவில் நேற்றிரவு கப்பல் ஊழியர்கள் சிலர் உயிர் காக்கும் படகில் தவித்துக்கொண்டிருந்ததைக் கண்டதாக கொல்கத்தா துறைமுக சங்கத்தின் தலைவர் ஆர்.பி.எஸ்.கலோன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் அவர்களை மீட்கும் முயற்சிகள் தொடங்கின.
கடின முயற்சிகளுக்குப் பிறகு இன்று காலை கடலில் உயிர்காக்கும் படகில் தத்தளித்த அந்த 18 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாயமான சரக்குக் கப்பலை தேடும் பணியில் இந்தியக் கப்பற்படையைச் சேர்ந்த மீட்புப் பணி விமானம் ஒன்றும், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனரா, இல்லை கப்பலில் சிக்கி யாரேனும் பலியாகி உள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.