கிரிக்கெட் வீரர்களே.. உடனே காஷ்மீரை விட்டு வெளியேறுங்க.. இர்ஃபான் பதான் உள்பட வீரர்களுக்கு உத்தரவு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரிரில் இருந்து உடனே வெளியேறுமாறு இர்ஃபான் பதான் உள்ளிட்ட 100 கிரிக்கெட் வீரர்களுக்கு அம்மாநில கிரிக்கெட் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 3 ஆக பிரிக்கும் முடிவில் மத்திய அரசு இருப்பதாக அச்சம் நிலவுகிறது. மேலும் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை வரும் சுதந்திர தினத்துக்குள் மத்திய அரசு ரத்து செய்யப்போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. சுமார் 60 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று அமர்நாத் யாத்திரையை ரத்து செய்த மத்திய அரசு உடனே அவர்களை காஷ்மீரை விட்டு வெளியேறு மாறு உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் சுற்றுலா பயணிகளையும் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் விரைவில் வெளியேறுவதற்கு வசதியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஏரளாமான விமானங்களை இயக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் ஸ்ரீநகரில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடுவதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எட்டு அணிகளின் வீரர்கள் அங்கு வந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி ஆலோசகரான இர்ஃபான் பதானும் அங்கு உள்ளார்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி போட்டித் தொடர் தொடங்குவதாக இருந்த நிலையில் அந்த மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, வீரர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல அம்மாநில கிரிக்கெட் சங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே 100 வீரர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. இர்பான் பதான் உள்ளிட்ட மேலும் 100 வீரர்கள், இன்று சொந்த ஊர் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.