கம்பேக் கொடுக்கும் மம்தா யூனிட்... கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் கட்சியில் ஐக்கியம்!
கொல்கத்தா: கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, பெங்காலி திரைப்பட நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முல்லிக், சயோனி கோஷ் ஆகியோர் திரிணாமுல் கட்சியில் இணைந்தனர்.
இன்று முதல் ஒரு புதிய பயணம் தொடங்குகிறது. உங்கள் எல்லா அன்பும் ஆதரவும் தேவை என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்க வேண்டும் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.இந்த முறை மேற்கு வங்கத்தில் கண்டிப்பாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
சூடுபிடிக்கும் தேர்தல் களம்
மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. அங்கு ஆட்சியை தக்க வேண்டும் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.இந்த முறை மேற்கு வங்கத்தில் கண்டிப்பாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதற்காக பாஜக வியூகம் வகுத்து வருகிறது.
முக்கிய தலைவர்கள் விலகல்
இதனால் பாஜகவின் அமித்ஷா அங்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா ஆகியோரும் பிரசாரம் செய்தனர். இருகட்சியினரும் வார்த்தையால் மோதிக் கொண்டனர். மம்தா பானர்ஜியின் வலது கரமாக விளங்கிய சுவேந்து அதிகாரி உள்பட பலர் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது மம்தாவுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்தது.
திரிணாமுல் கட்சியில் இணைந்தார்
மேற்கு வங்கத்தில் அமிதிஷாவின் கணக்கு பலிக்க தொடங்கும் நேரத்தில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி உள்பட 4 பிரபலங்கள் இன்று திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர் . மேற்கு வங்கத்தில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் மனோஜ் திவாரி, பெங்காலி திரைப்பட நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முல்லிக், சயோனி கோஷ் ஆகியோரும் திரிணாமுல் கட்சியில் இணைந்தனர்.
புதிய பயணம் தொடங்கியுள்ளது
திரிணாமுல் கட்சியில் சேர்ந்த மனோஜ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில், ' இன்று முதல் ஒரு புதிய பயணம் தொடங்குகிறது. உங்கள் எல்லா அன்பும் ஆதரவும் தேவை. இனிமேல் இது இன்ஸ்டாகிராமில் எனது அரசியல் சுயவிவரமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.