அரசியல் ஆட்டத்தில் அசத்துவாரா ஸ்ரீசாந்த்.. மீண்டும் தீவிர அரசியலில் களமிறங்குகிறார்!
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்தவரும், முன்னாள் வேகப் பந்துவீச்சாளரும், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவரும், கோர்ட்டால் நிரபராதி என விடுவிக்கப்பட்டவருமான ஸ்ரீசாந்த் மீண்டும் தீவிர அரசியலில் இறங்குகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கேரள சட்டசபைத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு வாய்ப்பு வழங்கியது பாஜக. ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. அந்தத் தொகுதியில் வி.எஸ். சிவகுமார் என்பவர் வெற்றி பெற்றார்.
ஸ்ரீசாந்துக்கு மூன்றாம் இடமே கிடைத்தது. இதையடுத்து அரசியலை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்த ஸ்ரீசாந்த் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார் ஸ்ரீசாந்த்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், எனது வாழ்வில் அரசியலே முதன்மையானது என்றும் இளைஞர்கள் அரசியலில் ஈடுபட பெரும் வாய்ப்பை பாஜக வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் எனது பங்கிற்கு அதிக அளவில் இளைஞர்களை பாஜகவில் சேர முயற்சி செய்வேன் என்றும் தெரிவித்தார்.
2013 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். ஸ்ரீசாந்த், சவாண் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த தில்லி நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று இவர்கள் 3 பேர் உள்பட 36 பேரை விடுவித்தது. ஆனால், ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட வீரர்களின் (ஸ்ரீசாந்த், அங்கித் சவாண் உள்ளிட்டோர்) ஆயுள்காலத் தடை தொடரும் என்று பிசிசிஐ அறிவித்தது.