புனேவில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை- பிரபல ரவுடி ஷியாம் தபாதே சுட்டுக் கொலை
புனேவில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பிரபல ரவுடியும் அவரது உதவியாளரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
புனே: தகவல் உரிமை ஆர்வலர் மற்றும் பாஜக தலைவர் ஒருவரை கொன்ற வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் ஷியாம் தபாதேவுக்கும் புனே பொலீசாருக்கும் இடையே நடந்த சண்டையில் அவரும்அவரது உதவியாளரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
புனேவில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலேகான் என்ற இடத்தில் பாஜக தலைவர் சச்சின் ஷேல்கே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஷியாம் தபாதேவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், சகான் வனப்பகுதியில் ஷியாம் தபாதேவும் அவரது உதவியாளரும் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர். அங்கு இரவு முழுவதும் போலீசார் அவர்களை தேடினர். அப்போது வர்சா என்ற இடத்தில் காற்றாலை மின் நிறுவனம் அருகே அவர்கள் மறைந்திருந்தது தெரியவந்தது.
அவர்களை சரண் அடையும் படி போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். இதில் போலீசாருக்கும் அந்த இருவருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஷியாம் தபாதேவும் அவரது உதவியாளரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர் மீது பல்வேறு கொலை, ஆட்கடத்தல். கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாகவும், ஷேல்கே வழக்கில் அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை புனே காவல் கண்காணிப்பாளர் ஜெய் தெரிவித்துள்ளார்.