சவுதியில் வேலையிழந்து தவிக்கும் 10,000 இந்தியர்கள் இரு தினங்களில் மீட்கப்படுவார்கள் - சுஷ்மா உறுதி
டெல்லி: சவுதி அரேபியா நாட்டில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்கள் இரண்டு நாட்களில் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.
சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியற்றி வருகின்றனர். எண்ணெய் வளமிக்க இந்த நாடுகளில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் போன்றவற்றில் தொழிலாளர்களாக இவர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இதில் அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் மட்டும் 30 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதைப்போல குவைத், கத்தார், ஓமன் போன்ற நாடுகளிலும் கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. இதனால் சவுதி அரேபியாவில் இயங்கி வந்த பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. அவற்றில் பணிபுரிந்து வந்த சுமார 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் வேலையும், ஊதியமும் இழந்து உள்ளனர். பல நாட்களாக உணவின்றி பட்டினியில் வாடி வந்த அவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
கையில் பணம் இல்லாததால் நாடு திரும்ப முடியாமல் கடும் இன்னலில் சிக்கி உள்ளனர். இது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து கொடுக்கும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தாமாகவே முன்வந்து இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது, சவுதி அரேபியாவில் வேலையின்றி தவித்து வரும் இந்திய தொழிலாளர்களை அந்நாட்டு அரசு தனது சொந்த செலவில் அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், முகாம்களில் உள்ள இலவச மருத்துவ சிகிச்சை, உணவு அளிக்கவும் சவுதி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், வாய்ப்புள்ள தொழிலாளர்களை அவர்கள் வேலை பார்த்த நிறுவனத்தில் மீண்டும் பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த செவ்வாய்கிழமை மாலை முதல் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் சவுதி அரேபியாவில் முகாமிட்டுள்ளார். இந்திய தொழிலாளர்களுக்காக ஏற்பாடுகளை செய்து முடித்த பின்னர் அவர் நாடு திரும்புவார்.
சவுதி அரேபிய அரசு இந்திய தொழிலாளர்களின் அவல நிலை குறித்து கவனத்தில் கொண்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இரண்டு நாட்களில் இந்திய தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்க்குமாறு சவுதி மன்னர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான விசா வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய தொழிலாளர்கள் தாயகம் திரும்புவதற்கான போக்குவரத்து செலவுகளையும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. சவுதி அரேபிய அரசுக்கு மிக்க நன்றி. இது பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய பயணத்திற்கு கிடைத்த அரசியல் வெற்றி ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.