விமர்சனங்களும், சாதனைகளும்... ராகுல் காந்தி கடந்து வந்த அரசியல் பாதை
பல்வேறு விமர்சனங்களை கடந்து வந்த ராகுல்காந்தி தற்போது காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
Recommended Video
சென்னை: காங்கிரஸ் தலைவராக இன்று பொறுப்பேற்றுள்ள ராகுல்காந்தி கடந்து வந்துள்ள அரசியல் பாதையில் விமர்சனங்களும், சாதனைகளும், சோதனைகளும் ஏராளமாக உள்ளன.
காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்பது மூத்த நிர்வாகிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். கட்சியின் துணை தலைவராக ஏராளமான சாதனைகளை புரிந்துள்ள ராகுல் தலைவராக பொறுப்பேற்றால் இன்னும் பல உயரங்களை தொட முடியும் என்பது அவர்களது நம்பிக்கை.
அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேறியது. காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சோதனைகளும், சாதனைகளும்
இதனிடையே ராகுல் காந்தி கடந்து வந்துள்ள அரசியல் பாதையில் ஏராளமான சோதனைகளும், சாதனைகளும் உள்ளன. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட வெற்றிடத்தை இவர்தான் நிரப்புவார் என்ற அளவுக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் வளர்ந்து விட்டார் ராகுல். இவரால்தான் காங்கிரஸ் முன்னேற்றம் அடையும் என்ற தொண்டர்கள் நினைக்கும் அளவுக்கு ராகுலின் செயல்பாடுகள் மாறிவிட்டது.
ராகுலின் சிம்பிள் நேச்சர்
ஏழைகளின் வீடுகளுக்கு சென்று சாப்பிடுவது, சிறிய டீக்கடைகளில் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிடுவது, மக்களோடு மக்களாக அமர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவது, விவசாயிகளுக்கு ஆதரவு கொடுப்பது என்று ராகுலின் செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு உள்ளானபோதும், அவரை தேசிய அளவுக்கு உயர்த்தி காட்டியது இந்த இயல்பான தன்மையே ஆகும்.
வரலாற்றில் இல்லாத நேர்காணல்
கடந்த 2007-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ராகுல் பொறுப்பேற்றவுடன் காங்கிரஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சிந்தனையாளர்கள் குழுவை உருவாக்கினார். இது ராகுலுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. 2009-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும் என்று கட்சியினர் விரும்பினர். அவர்களின் எண்ணம் நிறைவேறாத போதிலும் 6 வாரங்களில் நாடு முழுவதும் 125 பொதுக் கூட்டங்களை நடத்திய பெருமை ராகுலுக்கு உண்டு.
கிழித்தெறியப்பட வேண்டியது
கடந்த 2013-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் சார்பில் குற்றவழக்குகளின் தொடர்புடைய எம்.பி.க்களின் பதவியை காப்பாற்றுவது தொடர்பான அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை தடுத்து நிறுத்தியவர் ராகுல் காந்தி. அப்போது இந்த அவசரச் சட்டம் முட்டாள்தனமானது கிழித்தெறியப்பட வேண்டியது என்று மிகவும் ஆவேசத்துடன் ராகுல் கூறியது அவரை வேறு இடத்துக்கு கொண்டு சென்றது.
9-லிருந்து 12-ஆக உயர்த்தியவர்
அதேபோல் காங்கிரஸ் ஆட்சியில் மானிய விலையில் ஆண்டுக்கு 9 சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி 12 என்று உயர்த்தியவர் ராகுல் காந்திதான். இதனால் பொதுமக்களின் மனதை கொள்ளை கொண்டார். என்னதான் வெற்றி தோல்விகள் என அரசியலில் மாறி மாறி இருந்ததாலும் எந்த பதவியாக இருந்தாலும் தான் செயல்படுவதில்தான் உள்ளது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. அதுபோல் ராகுல்காந்திக்கென என்னதான் நல்ல பெயர் இருந்தாலும், விமர்சனங்கள் இருந்தாலும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதும் அவர் நடந்து கொள்ளும் விதத்தில்தான் அனைத்தும் இருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை.