இளம் தொழில்முனைவர் கையை குதறிய 'முதலை'... அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்!
பெங்களூரைச் சேர்ந்த இளம் தொழில்முனைவரின் கையை முதலை ஒன்று கடித்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் தடையை மீறி சென்றதால் அவர் மீது வழக்கு பதிவு செ
பெங்களூரு : பெங்களூரைச் சேர்ந்த இளம் தொழில்முனைவர் சுற்றுலா சென்ற இடத்தில் அவரின் கையை முதலை கடித்துவிட்டது. ஆனால் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் மீது வழக்கும் பாய்ந்துள்ளது.
ஐஐடி மாணவரான முடிட் தண்வாடே நாக்பூரைச் சேர்ந்தவர், இந்த 26வயது இளைஞர் பெங்களூருவில் ஹெல்த் கேர் தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதனை நிர்வகித்து வருகிறார். விடுமுறை நாட்களில் வனப்பகுதிகளுக்கு சென்று நேரத்தை கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் தண்வாடே.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவில் தட்டேக்கர் ஏரிக்கு தன்னுடைய பெண் நண்பர் மற்றும் இரண்டு நாய்களுடன் தண்வாடே சுற்றுலா சென்றுள்ளார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏரிக்கு அருகில் சென்ற தண்வாடே தன்னுடைய நாய்களை நீர்நிலைகளில் குளிக்க வைக்க நினைத்துள்ளார்.
பாய்ந்த முதலை
அப்போது நீரில் இருந்த முதலை ஒன்று திடீரென பாய்ந்து வந்து தண்வாடேவின் இடது கையை கவ்வியது. வலியால் துடித்த தண்வாடேவை, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் முதலையிடமிருந்து அவரது பெண் நண்பர் காப்பாற்றியுள்ளார்.
சிகிச்சை
முதலை கடித்ததில் இடது கையை முழுமையாக இழந்த தண்வாடே உடனடியாக ஹாஸ்மேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
வழக்குப் பதிவு
இதனிடையே சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் நுழைந்த தண்வாடே மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடை செய்யப்பட்ட பகுதியில் சென்றது குறித்தும், முதலை கடித்தது குறித்த விவரங்களை கூறுமாறு தண்வாடேவின் பெண் நண்பரை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். முதலை தண்வாடேவின் கையை மட்டும் கடித்து இழுத்ததால் எஞ்சிய தசைப் பகுதிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒன்றரை மாதத்திற்கு பிறகே அவருக்கு செயற்கை கை பொருத்த முடியும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வனத்துறை எச்சரிக்கை
அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ராம்நகர் மாவட்ட ஏரிப் பகுதிக்கு பலரும் வந்து செல்கின்றனர். இங்கு அதிக அளவில் முதலைகள் இருப்பதால் பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இது தெரியாமல் வந்ததால் இடது கையை இழந்தோடு வழக்குப் பதிவிற்கும் ஆளாகியுள்ளார் இளம் தொழில்முனைவர் என்று கூறுகின்றனர் வனத்துறையினர்.