சித்தராமையா காரை விட்டு இறங்காத "காக்கா"... "யாக்கே?" என்று கேட்டு விவாதம் நடத்திய டிவி சேனல்கள்!
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கார் மீது காகம் ஒன்று அமர்ந்து கொண்டு விரட்டியபோதும் விலகி செல்லாமல் இருந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் 'பரபரப்பை' ஏற்படுத்தியுள்ளது. டிவி சேனல்கள் இந்த சம்பவம் குறித்து பெரும் விவாதமே நடத்திவிட்டன என்றால் பாருங்கள்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அலுவலக வீட்டின் பெயர் 'கிருஷ்ணா'. இங்கு நேற்று அவர் கோப்புகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் கிளம்ப தயாரானபோது, அவரது காரின் பக்கவாட்டு கண்ணாடியில் ஒரு காகம் வந்து அமர்ந்து கொண்டது.
முதல்வர் வருகைக்கு நேரமாகிக்கொண்டிருந்ததால், காகத்தை விரட்ட பாதுகாப்பு ஊழியர்கள் முயன்றனர். ச்சூ...,, ச்சூ.. என்று அவர்கள் சத்தம் போட்டு பார்த்தும், கைகளை அசைத்து பயமுறுத்தி பார்த்தும் காகம் அசைவதாக இல்லை.
தொடவில்லை
முதல்வர் வீட்டை விட்டு வெளியேவரும்போது பேட்டியெடுக்க நிருபர்கள் அங்கு குவிந்திருந்ததால், இந்த காட்சியை பார்க்க முடிந்தது. நிருபர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது, காகத்தை அடித்து விரட்டினால் அது விலங்கு நல ஆர்வலர்கள் கவனத்திற்கு சென்று பிரச்சினை பெரிதாகிவிடும் என்று நினைத்ததாலோ என்னவோ காகத்தை தொடாமலேயே விரட்ட முயன்றனர் முதல்வர் ஊழியர்கள். ஆனால் காகமோ அசையவில்லை. சிறிது நேரம் கரைந்துவிட்டு, 10 நிமிட காலம் கழித்த பிறகு சிறகடித்து பறந்துவிட்டது.
டிவி சேனல்களில் விவாதம்
சுவாரசியமாக உள்ளதே என்று நினைத்த சில டிவி கேமராமேன்கள் இந்த காட்சியை படம் பிடித்து ஒளிபரப்பினர். அவ்வளவுதான், தாமதம், டிவி சேனல்கள் இதையே வைத்து விவாத நிகழ்ச்சிகளை நேற்று முழுக்க நடத்தி முடித்துவிட்டன.
பிரச்சினைகள்
ஜோதிடர்களை அழைத்துவந்து, காரில் காகம் அமர்ந்த காரணம் குறித்து விளக்கம் கேட்டன. சித்தராமையாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்குவதற்காக காங்கிரஸ் கட்சியில் உள்ளடி வேலைகள் நடக்கின்றன. சம்பள உயர்வு கேட்டு காவல்துறையினரே ஸ்டிரைக்கில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் நேற்று ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுப்டடுள்ளனர்.
கோயிலுக்கு செல்ல வேண்டும்
இதுபோன்ற சம்பவங்களுக்கு, சித்தராமையாவின் நேரம் சரியில்லாததுதான் காரணம் என்று கூறும் ஜோதிடர்கள், சித்தராமையாவிற்கு நேரம் சரியில்லை என்பதை உணர்த்தவே, காகம் வாயிலாக எச்சரிக்கை வந்துள்ளது. சனிக்கிழமை தோறும் சனீஸ்வரர் கோயிலுக்கோ அல்லது ஆஞ்சநேயர் கோயிலுக்கோ சித்தராமையா செல்வது நல்லது என்று பல்வேறு ஜோதிடர்கள் அறிவுரை கூறினர்.
என்ன செய்யப்போகிறார் சித்து
ஆனால், சித்தராமையாவோ, நாத்தீகம் பேசுபவர் என்பதால் (எப்போதாவது கோயிலுக்கு செல்வார்) ஜோதிடர்கள் அறிவுரையை அவர் ஏற்பாரா, ஏற்காமல் விடுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.