காஷ்மீரில் சிஆர்பிஎப் துப்பாக்கிச் சூடு- பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு
ஸ்ரீநகர்: காஷ்மீரின்ப த்காம் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிஆர்பிஎப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து சாவு எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
பாதுகாப்புப் படையினருடனான மோதலில் கடந்த மாதம் பயங்கரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுதந்திர தினமான நேற்று சிஆர்பிஎப் படையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசியுதாகவும், பதிலுக்கு சிஆர்பிஎப் படையினர் சுட்டதில் இரண்டு பேர் பலியாகியுள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதே போன்று, 10ம் வகுப்பு மாணவரான யாசிர் சலாம் ஸ்ரீநகரில் உள்ள படமலோ யார்டு பகுதி அருகே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரது இறப்பிற்கு போலீசார்தான் காரணம் என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதே நாளில், ஸ்ரீநகரில் போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் அதிகாரி பிரமோத் குமார் பலியானார். போராட்டக்காரர்கள் சிபிஆர்எப் நிலைகள் மீது நடத்திய தொடர் தாக்குதலில் 9 படை வீர்ர்களும், போலீசார் ஒருவரும் பலியாகியுள்ளனர்.
ஆகஸ்டு 13ம் தேதி நடைபெற்ற கல்வீச்சில் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 18 வயது இளைஞர் அஷ்பக் அகமது பட் என்பவரும் சுதந்திர தினத்தன்று உயிரிழந்தார்.
காஷ்மீரில் தொடர்ந்து 39 நாட்களாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தும் சாவு எண்ணிக்கை குறைந்தபாடில்லை. சுதந்திர தினத்தன்று மட்டும் நடைபெற்ற பல்வேறு சண்டைகளில் சுமார் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜுலை 9ம் முதல் சிஆர்பிஎப், போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் கண்களை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.