ஓபிஎஸ்-க்கு மத்திய படை பாதுகாப்பு வழங்க உத்தரவு.... தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்!
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மத்திய படையின் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மத்திய படையின் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இரட்டை சிலை முடக்கப்பட்டதால் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இரட்டை மின்விளக்கு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் பணிகள் களைக் கட்ட தொடங்கிவிட்டன. இதனிடையே ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொள்ளுமாறு ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கு மிரட்டல்கள் வந்தன. மேலும் ஓ.பன்னீர் செல்வத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அந்த அணியினர் கூறி வந்தனர்.
தேனி அருகே ஓபிஎஸ் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதலையும் நடத்தியிருந்தனர். இதைத் தொடர்ந்து மத்திய படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஓபிஎஸ் அணியினர் மனு அளித்தனர்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக டி.ஜி.பி.க்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், பன்னீர்செல்வத்துக்கான பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.