மேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடியில் நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. சிஆர்பிஎஃப் விளக்கம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கூச் பெகர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் எங்கள் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என சிஆர்பிஎஃப் விளக்கமளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் 3 கட்டங்களில் 91 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.
4ஆவது கட்டமாக 44 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகி சட்டர்ஜியின் கார் மீது உள்ளூர் மக்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு வீச்சும் அங்கு நடைபெற்றது. செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களின் கார்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டு கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடியாக கண்டறியப்பட்ட கூச் பெகரில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்
மே வங்க தேர்தல்.. திடீர் வன்முறை, துப்பாக்கிச்சூடு.. சிதால்குர்ச்சியில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில் இந்த துப்பாக்கிச் சூட்டை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎப்) நடத்தினர். வரிசையில் நின்ற வாக்காளர்களை சிஆர்பிஎஃப் சுட்டுக் கொன்றுள்ளது. எங்கிருந்து வந்தது இது போன்ற தைரியம் என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து சிஆர்பிஎஃப் விளக்கமளிக்கையில், கூச் பெஹாரில் சீத்தல்குச்சி சட்டசபை தொகுதியில் ஜோர்பத்கி பகுதியில் 126வது பூத்துக்கு வெளியே பொதுமக்களில் 4 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர் என ஊடகங்களில் தகவல் வெளிவந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த பூத்தில் எங்களுடைய வீரர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை. அந்த சம்பவத்துடன் எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என சிஆர்பிஎஃப் விளக்கமளித்துள்ளது. எனவே துப்பாக்கிச் சூடு எப்படி யாரால் நடத்தப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.