பெற்றோர் உள்ளிட்ட 7 பேர் கொடூர கொலை: காதல் ஜோடிக்கு தூக்கு - சுப்ரீம்கோர்ட் அதிரடி
டெல்லி: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை கொடூரமாக கொலை செய்த பெண்ணிற்கும், அவருக்கு உதவிய காதலனுக்கும் மரண தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் அருகில் உள்ள பாபன் கேரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷபனம் பட்டதாரி ஆசிரியையான இவர் சலீம் என்ற வாலிபரை காதலித்தார். இருவரும் நெருங்கிப் பழகியதில் ஷபனம் கர்ப்பம் ஆனார். இது பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் கண்டித்தனர். மேலும் சலீமுடன் பழகுவதற்கும் தடை விதித்தனர். சொத்தில் பங்கு தரமுடியாது என கூறினர். இதையடுத்து தனது காதலுக்கு தடையாக உள்ள தனது குடும்பத்தினரை காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்ட ஷபனம் திட்டமிட்டார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இரவு டீயில் மயக்க மருந்து கலந்து பெற்றோர், 2 சகோதரர்கள், அண்ணி, அவர்களது 2 குழந்தைகள் ஆகியோருக்கு கொடுத்தனர். அவர்கள் அனைவரும் மயக்கம் அடைந்த உடன் ஷபனம் தனது வீட்டுக்கு காதலனை வரவழைத்தார். காதலன் சலீம் இரும்பு கம்பியுடன் வந்து 6 பேரையும் அடித்து கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். அதன் பிறகு 10 மாத கைக்குழந்தையை ஷபனம் அடித்து கொன்றார்.
இந்த கொடூர கொலைகள் பற்றி விசாரணை மேற்கொண்ட மொரதாபாத் போலீசார் விசாரணை நடத்தி ஷபனம்-சலீம் ஜோடியை கைது செய்தனர். அவர்கள் மீது செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை அலகாபாத் உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது.
தூக்கு தண்டனையை எதிர்த்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இந்த மனு வெள்ளிக்கிழமையன்று தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, அருண் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஷபனம், சலீம் ஜோடிக்கு கீழ்கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.
தலைமை நீதிபதி தத்து தனது தீர்ப்பில், குற்றவாளி ஷபனம் படித்தவர், ஆசிரியையாக வேலை பார்த்தவர், பெண்ணாக இருந்தும் அவர் கொலைக்கு உடந்தையாக இருந்ததுடன் 10 மாத குழந்தையை கொன்று இருக்கிறார். எனவே அவருக்கு கருணை காட்ட முடியாது என்று கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3வது பெண் ஷபனம் ஆவார்.
மராட்டியத்தில் 5 குழந்தைகளை கடத்திச் சென்று கொன்ற ரேணுகா ஷிண்டே, உ.பி.யில் கணவருடன் சேர்ந்து தனது பெற்றோர், சகோதரி மற்றும் 3 குழந்தைகள் உள்பட 7 பேரை கொன்ற சோனியா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்களில் ரேணுகா ஷிண்டேயின் கருணை மனுவை குடியரசுத்தலைவர் நிராகரித்து விட்டார். சோனியாவின் கருணை மனு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஷபனத்திற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.