பரோல் அல்லது ஜாமீனில் விடுதலை செய்யுங்கள்... மே.வ. ஆளுநருக்கு மாஜி நீதிபதி கர்ணன் மனு
தம்மை பரோல் அல்லது ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என மேற்கு வங்க ஆளுநருக்கு முன்னாள் நீதிபதி கர்ணன் மனு அளித்துள்ளார்.
கொல்கத்தா: தம்மை பரோல் அல்லது ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க ஆளுநருக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மனு அளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் மீது ஊழல் புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
அதேநேரத்தில் கர்ணன் மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி அடைந்து அவதூறு வழக்கும் பதிவு செய்தது. இதற்கும் கர்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
6 மாதம் சிறை தண்டனை
உச்சநீதிமன்றத்துடனான மோதலில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நீதிபதியாக இருந்த கர்ணன் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவான நிலையிலேயே ஓய்வும் பெற்றுவிட்டார் கர்ணன்.
கோவையில் கைது
அவரைத் தேடி தமிழகத்தில் முகாமிட்டிருந்தது மேற்கு வங்க போலீசார். பின்னர் கோவையில் பதுங்கியிருந்த கர்ணன் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் தமக்கு உடல்நிலை சரியில்லை என கூறி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநருக்கு மனு
இந்நிலையில் மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதிக்கு கர்ணன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தம்மை கைது செய்ததில் அரசியல் சாசன நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை.
நிபந்தனைகள் ஏற்க தயார்
இதனால் நீதியை நிலைநிறுத்தும் வரை தம்மை பரோல் அல்லது ஜாமீனில் விடுதலை செய்யுங்கள். இதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகளை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.