9,200 ஐஎஸ்ஐஎஸ் ட்விட்டர் கணக்குகளை முடக்கிய 'அனானிமஸ்' ஹேக்கர்கள்
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான ட்விட்டர் கணக்குகளை முடக்க அத்தகைய கணக்குகளில் #CtrlSec என்ற ஹேஷ்டேக்கை ஃபிளாக் பண்ணுமாறு அனானிமஸ் என்ற ஹேக்கிங் அமைப்பு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 9 ஆயிரத்து 200 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு ட்விட்டர் கணக்குகள் ஃபிளாக் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இவ்வாறு செய்வதால் ஒரு பின்விளைவும் உண்டு என்று உளவு நிறுவனமான ஐபி தெரிவித்துள்ளது. அந்த ட்விட்டர் கணக்குகளை தொடர்ந்து ஃபிளாக்(flag) செய்வதால் அவற்றில் இருந்து தகவல் பெற முடியாமல் போய்விடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
#CtrlSec, அனானிமஸ்
#CtrlSec ஷேக்டேக்கிற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அனானிமஸ் ஹேக்கிங் அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
இந்த உலகத்தின் பிரஜைகளாக மட்டும் அல்ல இன்டர்நெட் சமுதாயத்தின் உறுப்பினர்களாகவும் உள்ள நீங்கள் இந்த தகவலை படித்துவிட்டு அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். இதற்கு எவ்வளவு ஆதரவு கிடைக்கிறதோ அவ்வளவு விரைவில் ட்விட்டர் நிர்வாகம் முன்வந்து ஃபிளாக் செய்யப்பட்டுள்ள கணக்குகளை நீக்கும். அவ்வாறு செய்தால் ட்விட்டர் மூலம் கொள்கைளை பரப்ப, புதிய ஆட்களை தேர்வு செய்ய ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு சிக்கல் ஏற்படும்.
இந்த தகவலை பரப்ப உங்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும் என்று எல்லாம் இல்லை. இந்த தகவலை ரீட்வீட் அல்லது லைக் செய்தால் போதும். எங்கள் போராட்டத்திற்கு உதவுங்கள்!
உளவு நிறுவனங்கள்
தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவான ட்விட்டர் கணக்குகளை உளவுத் துறை அதிகாரிகள் தீவிரவமாக கண்காணித்து வருகிறார்கள். அந்த கணக்குகளை முடிக்க மேம்பட்ட முறை தேவை என்று அவர்கள் கருதுகிறார்கள்.
யாராவது ஒரு கணக்கை ஃபிளாக் செய்தால் உடனே அந்த கணக்கை ட்விட்டர் நிர்வாகம் நீக்கத் துவங்கியுள்ளது. அந்த கணக்குகளை முடக்கும் முன்பு ட்விட்டர் நிர்வாகம் பாதுகாப்பு ஏஜென்சீக்களை தொடர்பு கொள்வது நல்லது என்று உளவுத் துறை அதிகாரிகள் நினைக்கிறார்கள்.
ட்விட்டர்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான ட்விட்டர் கணக்குகள் மூலம் குற்றவாளிகளை பிடிக்க முடிந்துள்ளது. இந்தியாவில் ட்விட்டர் மூலம் 9 பேரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு சரியான நேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ட்விட்டர் மூலம் புதியவர்கள் அமைப்பில் சேர்க்கப்படுவது பற்றியும், அவர்கள் எங்கிருந்து அமைப்பில் சேர்கிறார்கள் என்பது பற்றியும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கிறது.