பெங்களூருவில் 3 நாட்களாக நீடித்த ஊரடங்கு உத்தரவு வாபஸ்- 144 தடை நீடிப்பு!!
பெங்களூரு: கன்னட அமைப்புகளின் உச்சகட்ட வன்முறையைத் தொடர்ந்து பெங்களூரு நகரில் கடந்த 3 நாட்களாக 16 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு நீடிக்கிறது.
பெங்களூரு நகரே நேற்று முன்தினம் போர்க்களமானது.. ஒரே நாளி 100-க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் கூண்டோடு எரிக்கப்பட்டன.
கேபிஎன் நிறுவனத்துக்கு சொந்தமான 52 பேருந்துகள் மொத்தமாக எரிக்கப்பட்ட காட்சி ஒரு ஊரே பற்றி எரிவதை வெளிப்படுத்தியிருந்தது.. தமிழக பதிவெண் கொண்ட வாகனம் எதுவானாலும் அதை தீக்கிரையாக்குவதையே கன்னட அமைப்பினர் குறிக்கோளாக வைத்திருந்தனர்..
இதனால் பெங்களூரு நகரில் முதலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் 16 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.
1991-ம் ஆண்டு காவிரி பிரச்சனைக்கான வன்முறையின் போது பெங்களூரு நகரம் எப்படி இருந்ததோ அதுபோல நேற்று பெங்களூரு நகரம் வெறிச்சோடியது.. இருப்பினும் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு அவ்வப்போது சிறிது நேரம் தளர்த்தப்பட்டது.
இன்று 3-வது நாளாகவும் பெங்களூருவில் 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவும் அமலில் இருந்தது. ஆனால் நிலைமை கட்டுக்குள் வந்ததால் காலை 9 மணிக்கு ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அதே நேரத்தில் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என போலீசார் அறிவித்துள்ளனர்.
#Curfew has been lifted in all 16 police station limits of Bengaluru City from 9AM today(14-09-2016) pic.twitter.com/eNlCCNPmSW
— BengaluruCityPolice (@BlrCityPolice) September 14, 2016