காஷ்மீரில் 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு!
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் செயல்பட்டு வந்த அன்சர் கஸ்வத் உல் ஹிந்த் என்ற தீவிரவாத இயக்கத்தின் தளபதியான ஜாகீர் மூசாவை பாதுகாப்புப் படையினர் நேற்று அதிகாலை சுட்டுக் கொன்றனர். இதையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டதுடன், அங்கு அசாதாரண சூழல் நிலவியது.
இதையடுத்து, ஸ்ரீநகர், குல்காம், புல்வாமா ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இணையதள சேவையும் முடக்கப்பட்டது. பாரமுல்லா- பனிகல் இடையிலான ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு உரை நிகழ்த்திய மோடி!
இந்த நிலையில், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. நவ்ஹட்டா, ரெயினாவரி, கான்யார், சஃபகதல் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தனியார் பஸ்களும், ஆட்டோரிக்ஷாக்களும் ஓடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அசம்பாவிதங்களை தடுப்பதற்காக காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்புப் பணிகளை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.