ஸ்ரீநகரின் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு ரத்து.. மக்கள் நிம்மதி பெருமூச்சு...
டெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த கலவரத்தையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. நேற்றிலிருந்து கலவர நிலைமை கொஞ்சம் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து ஸ்ரீநகரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஜுலை 8ம் தேதி புர்கன் வானி கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீரில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்திற்கு சுமார் 68 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கலவர நிலைமை சற்று ஓய்ந்து நிலைமை சீரடைந்து வருவதால் ஸ்ரீ நகரின் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக, ஸ்ரீநகருக்கு உட்பட்ட சில பகுதிகளில் நேற்று 8 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இதில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தையடுத்து இன்று முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். தங்களின் தேவைக்கு ஏற்ப சாலையில் நடந்து போவதும் வருவதுமாக உள்ளனர். மேலும், கார்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் சாலைகளில் இயக்கப்படுகின்றன.
எனினும், கடைகள், தனியார் நிறுவனங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.