இடஒதுக்கீடு கோரி இன்று குஜராத் பந்த்- பல இடங்களில் வன்முறை- அமைதி காக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்!
அகமதாபாத்: குஜராத்தில் படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி.சி.) சேர்த்து இடஒதுகீட்டு வழங்கக் கோரி இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் வன்முறை வெடித்தது. இத்தகைய வன்முறைகளை கைவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் 12% பேர் உள்ளனர். பொதுவாக படேல் சமூகத்தில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள். அரசியலிலும் அவர்களது ஆதிக்கம் உள்ளது.
குஜராத் மாநிலத்தின் பல முதல்வர்கள் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். தற்போதைய முதல்வர் ஆனந்திபென்னும் படேல் சமூகத்தவரே.
குஜராத்தில் பாரதிய ஜனதாவின் கிஷான் சங் அமைப்பானது வலிமையான பிரிவாக கருதப்படுகிறது. இது முழுவதும் படேல் சமூகத்தினரைக் கொண்ட அமைப்பு.
இருப்பினும் கடந்த சில மாதங்களாக திடீரென படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி நூற்றுக்கணக்கான பேரணி, போராட்டங்களை ஹர்தீக் படேல் தலைமையில் நடத்தி வருகின்றனர்.
இதன் உச்சகட்டமாக அகமதாபாத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தையும் ஹர்திக் படேல் நேற்று நடத்திக் காட்டினார். இந்த பொதுக்கூட்டத்தில் தங்களது கோரிக்கை மனுவை வாங்குவதற்கு முதலமைச்சர் ஆனந்திபென் படேல் வரும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் ஹர்திக் அறிவித்தார்.
ஆனால் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக கூறி போலீசார் அவரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். ஹர்திக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து படேல் சமூகத்தினர் மாநிலம் முழுவதும் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கணக்கான அரசு பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. அம்மாநில உள்துறை அமைச்சரின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த நிலையில் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி குஜராத் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு படேல் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ராஜ்கோட், சூரத், மேஷானா, போர்பந்தர் உள்ளிட்ட பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரிலும் பல இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் அரசுப் போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பல இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளன.
பிரதமர் மோடி வேண்டுகோள்
இதனிடையே குஜராத்தில் நடைபெறும் வன்முறைகளைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். வன்முறையால் எந்த ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.