ஆதார் விவரங்களை வைத்து வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் அபேஸ்... திடுக் தகவல்கள்!
அலஹாபாத்வங்கி, பேங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் வங்கி மற்றும் யூகோ வங்கிகள் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளன.
டெல்லி : வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் தகவல்களின் அடிப்படையில் 4 பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.
அலஹாபாத் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் வங்கி மற்றும் யூகோ வங்கி அண்மையில் மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை தந்துள்ளது. அதில் சுமார் ரூ.1.42 கோடி அளவிலான பணம் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஆதார் எண்ணை பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகள் அளித்துள்ள புள்ளிவிவரத்தின்படி சில வங்கிகளில் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவ்பிரதாப் சுக்லா செவ்வாய்கிழமை ராஜ்யசபாவில் எழுத்து வடிவில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளார்.
கட்டாயமாக்கலாமா?
ஆதாரை வங்கிக்கணக்கு, மொபைல் எண்ணுடன் இணைப்பதை கட்டாயமாக்குவது குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதே போன்று அரசின் சலுகைகளைப் பெற ஆதாரை கட்டாயமாக்கலாமா என்றும் உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
கணக்கில் இருந்து பணம் அம்போ
பேங்க் ஆப் இந்தியாவில் நடந்த இரண்டு சம்பவத்தில் தவறான ஆதார் எண்ணை வைத்து வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஆதார் தகவல்களை எடுத்து அதன் மூலம் பணத்தை எடுக்கும் மோசடி கும்பலை பிடிப்பதற்கான நடவடிக்கையை பலப்படுத்தியுள்ளதாக அந்த வங்கி அரசிடம் தெரிவித்துள்ளது.
முன்கூட்டியே கண்டுபிடித்த அலஹாபாத் வங்கி
அலஹாபாத் வங்கியில் இருந்து ரூ.49 ஆயிரம் பணம் ஆதார் எண்ணை வைத்து மோசடி செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது. ஒரே ஆதார் எண் இரண்டு ஆதார் அட்டைகளில் இருவேறு பெயர்களில் இருந்ததை வங்கி கண்டறிந்ததையடுத்து வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பணம் திருடப்படுவது தடுக்கப்பட்டாக வங்கி கூறியுள்ளது.
மோசடியில் வங்கி ஊழியர்கள்
இதே போன்று சிண்டிகேட் வங்கியின் ஊழியர்களே ரூ.226,000 பணத்தை ஆதார் விவரங்களை வைத்து ஆட்டைய போட்டுள்ளனர். இதனையடுத்து ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை சரிபார்க்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பணத்தை பறிகொடுத்த வாடிக்கையாளர்
2017ம் ஆண்டில் இது போன்ற மோசடிகளால் வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய கணக்கில் இருந்த ரூ. 95,250 பணத்தை இழந்தார். 2016-17ம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் இது போன்று 20 மோசடிப் புகார்களைக் கூறியுள்ளன. இந்த மோசடியால் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ரூ. 765,268 ஸ்வாகா ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.