சசிகலாவுக்கு சாப்பாடு வாங்க கியூவில் நின்றாரா சயனைடு மல்லிகா? சிறை அதிகாரிகள் விளக்கம்
சசிகலா சிறை உணவையே சாப்பிட வேண்டிய நிலையில், அவருக்காக மல்லிகா கியூவில் நின்று சாப்பாடு வாங்கி கொடுக்கும் அளவுக்கு பழக்கம் அதிகரித்ததாக சில ஊடகங்கள் கூறின.
பெங்களூர்: சசிகலாவுக்கு சாப்பாடு வாங்கித்தர சையனைடு மல்லிகா சிறைக்குள் கியூவில் நின்றதாக வெளியான மீடியா செய்திகள் குறித்து சிறை அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
சயனைடு கொடுத்து அரை டஜனுக்கும் மேற்பட்ட பெண்களை அடுத்தடுத்து கொலை செய்த கொடும் குற்றவாளியான கர்நாடகாவை சேர்ந்த மல்லிகாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சமீபத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அதே சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மல்லிகா சமீபத்தில் பெல்காம் (தற்போது பெலகாவி) சிறைக்கு மாற்றப்பட்டார்.
மல்லிகா மாற்றம்
சசிகலாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற பயத்தால் அதிகாரிகள் மல்லிகாவை பெலகாவி சிறைக்கு மாற்றிவிட்டதாக செய்திகள் வெளியாகின. பெங்களூர் சிறையில் இருந்தபோது மல்லிகாவுக்கும், சசிகலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சசிகலா சிறை உணவையே சாப்பிட வேண்டிய நிலையில், அவருக்காக மல்லிகா கியூவில் நின்று சாப்பாடு வாங்கி கொடுக்கும் அளவுக்கு பழக்கம் அதிகரித்ததாக சில ஊடகங்கள் கூறின.
சிகிச்சை
இந்நிலையில், சிறை நிர்வாகம் இதற்கெல்லாம் விளக்கம் அளித்துள்ளது. மல்லிகா இதய நோயால் அவதிப்படுவதால், பெங்களூரிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்ததாம். எனவே பெலகாவி சிறையிலிருந்து சமீபத்தில் பெங்களூர் கொண்டுவரப்பட்டாராம் மல்லிகா. இதன்பிறகு, சுமார் 20 கி.மீ தூரத்திலுள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு சிறையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதாம்.
பழக்கம் இல்லை
தற்போது சிகிச்சை முடிந்த நிலையில் மல்லிகா பெலகாவிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. சசிகலா, இளவரசி ஆகியோர் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முதல் தளத்தில் உள்ள அறையில் உள்ளனர். அதன் அருகேயுள்ள அறைகள் காலியாகவே இருக்கின்றனவாம். தடுப்புகள் போட்டு அடைக்கப்பட்டுள்ளதால் சிறை அதிகாரிகள் மட்டுமே சசிகலா சிறை அறைக்குள் செல்ல முடியுமாம்.
சாப்பாடு வாங்கவில்லை
சயனைடு மல்லிகா அடைக்கப்பட்டிருந்த சிறை, இதிலிருந்து சற்று தொலைவில்தான் உள்ளதாம். அவர் அடைக்கப்பட்டிருந்த பிரிவே வேறு என்கிறார்கள் சிறை அதிகாரிகள். மல்லிகாவுக்கும், சசிகலாவுக்கும் பழக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும், சசிகலாவுக்காக மல்லிகா சாப்பாடு வாங்கி கொடுத்தார் என்பது மீடியாக்கள் சில வெளியிட்ட பொய்யான தகவல் என்றும் அதிகாரிகள் சிலர் தெரிவிக்கிறார்கள்.