மே.வங்கத்தை வேட்டையாடிய ஆம்பன் புயல்... கொரோனாவைவிட மிகப்பெரிய பேரிடர்.. மம்தா கவலை
கொல்கத்தா: கொரோனாவை விட ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.
Recommended Video
மிக கடுமையான ஆம்பன் புயல் புதன்கிழமை மதியம் 2.30மணி அளவில் திகா (மேற்கு வங்கம்) மற்றும் ஹதியா தீவுகள் (வங்கதேசம்) இடையே சுந்தரவன காடுகள் பகுதியில் கடக்க தொடங்கியது. ஒடிசாவின் பிரதீப் பகுதியை தொட்டபடி நகர்ந்தது. இதனால் பிரதிப், பாத்ரக், பாலாசோர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் 160 கிமீ வேகத்தில் காற்று வீசியது. கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.
பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. குடிசை வீடுகள் தரைமட்டம் ஆகின. மின் கம்பங்கள் சரிந்தன. மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் புயல் மாலை 4 மணிக்கு கரையை கடக்க தொடங்கியது. இந்த புயலால் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கான, கிழக்கு மிட்னாபூர் மாவட்டங்களில் 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. சுமார் 5 மணி நேரம் கடல் அலைகள் ராட்சத உயரத்தில் எழுந்தன. இரவு 7 மணி அளவில் புயல் கரையை முழுமையாக கடந்தது.
கொல்கத்தாவையே புரட்டி போட்ட ஆம்பன் புயல்.. ரூ.1 லட்சம் கோடிக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்திய துயரம்
கொல்கத்தாவை விட்டு புயல் கடந்த போது சுமார் அரை மணி நேரம் கொடூரமாக காற்று அடித்தது. இதனால் அந்த நகரத்தில் உள்ள மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன. குடிசை வீடுகள் அழிந்து போயின. சாலைகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. மேற்குவங்கத்தின் பல பகுதிகளில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 185 கிமீ வேகம் வரை இருந்தது. மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயலால் 10 முதல் 12 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
5,500 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுநோயை விட ஆம்பனின் தாக்கம் மோசமானது என்று கூறிய முதல்வர் மம்தா பானர்ஜி, இப்பகுதியில் சூறாவளி காரணமாக ரூ .1 டிரில்லியன் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார். மேற்கு வங்கத்தில் 500,000 க்கும் அதிகமானோர் மற்றும் ஒடிசாவில் 100,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.