மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட ஆம்பன்- கொல்கத்தாவில் 100 கி.மீ வேகத்தில் புயல் காற்று- 12 பேர் பலி
கொல்கத்தா: வங்கக் கடலில் உருவாகி மேற்கு வங்கத்துக்கும் வங்கதேசத்துக்கும் இடையே ஆம்பன் (அம்பன், உம்பன்) சூப்பர் புயல் உக்கிரமாக கரையை கடந்தது. ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது மேற்கு வங்க மாநிலத்தையே புரட்டி போட்டது. ஆம்பன் புயல் தாக்குதலில் இதுவரை மேற்கு வங்கத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர்.
வங்கக் கடலில் உருவெடுத்த ஆம்பன், சூப்பர் புயலாக மாறியது. 1999-ல் ஒடிஷாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை சூப்பர் புயல் பலி கொண்டது.
இதன் பின்னர் அதாவது 21 ஆண்டுகளுக்குப் பின்னர் வங்க கடல் ஆம்பன் எனும் சூப்பர் புயல் உருவானது. இந்த புயல் இன்று பிற்பகல் முதல் மேற்கு வங்கத்தின் டிகாவுக்கும் வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கும் இடையே கரையை கடந்தது. இது சுமார் 4 மணிநேரம் கரையை கடந்தது.
அப்போது மணிக்கு 160 கி.மீ முதல்180 கி.மீ வரை பேய்க்காற்றும் கனமழையும் கொட்டியது. இதனால் ஒடிஷா, மேற்கு வங்க கடலோர மாவட்டங்கள் உருக்குலைந்து போயின.
கனமழை.. சுழன்று அடித்த காற்று.. மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்த ஆம்பன் புயல்
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் தொடர்ந்து 100 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியது. இதனால் வீதிகளில் மிகப் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணிகளை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மேற்கொன்டு வருகின்றனர்.
வங்கக் கடலில் இருந்து படுஉக்கிரத்துடன் கரையை கடந்த ஆம்பன் புயலின் கோர தாண்டவத்துக்கு இதுவரை 12 பேர் பலியாகி இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.