மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் கரையை கடந்தது 'புல் புல்’ புயல்.. மேற்கு வங்கத்தில் பேய் மழை!
கொல்கத்தா: 'புல் புல்' புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மேற்கு வங்கத்தின் கடலோர பகுதி மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தில் மிக அதி கனமழை பெய்தது.
வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் புயலாக உருவெடுத்து மேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இந்த புயலுக்கு பாகிஸ்தான் அளித்த புல்புல் என்ற பெயர் சூட்டப்பட்டது.
இந்த புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச நாட்டை ஒட்டி கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்த போது 100 முதல் 120 கிலோமீட்டருக்கு காற்று வீசியதுடன் கனமழையும் பெய்தது.
வடகிழக்கு மாநிங்கள்
ஒடிசா, மேற்கு வங்கம், வங்காளம், மிசோரம், மேகலயா, திரிபுரா மற்றும் மிசோரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கதேசத்தின் டாக்காவிலும், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது.
19லட்சம் பேர்
புயல் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பு காரமணாக மேற்கு வங்கத்தில் கடலோர மாவட்டங்களில் மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்கவைப்பதற்காக 5500 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. சுமார் 19 லட்சம் மக்கள் புயல் வரும் முன் அங்கு தங்க வைக்கப்பட்டனர்.
இயல்பு வாழ்க்கை
மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றின் அகற்றும் பணி நடந்து வருகிறது. புயலால் சேதமடைந்த பகுதிகளில் நிவாரண பணிகளை பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டு வருகிறார்கள். புல்புல் புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் வடக்கு24 பிரக்னா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக 4 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிசாவில் புல்புல் புயல் காரணமாக கெந்த்ராபாராவில் 2 பேர் வெவ்வேறு நிகழ்வில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே கடல்கொந்தளிப்பாக இருப்பதால் ஒடிசா முதல் மேற்குவங்கம் வரையிலான பகுதியில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.