நாளை அதிகாலை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் புல்புல் புயல்.. கொல்கத்தா விமானநிலையம் மூடல்
கொல்கத்தா: புல் புல் புயல் நாளை அதிகாலையில் அதி தீவிர புயலாக கரையைக் கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான, 'புல் புல்' புயல், நாளை அதிகாலையில், மேற்கு வங்க மாநிலத்துக்கும், வங்கதேச நாட்டுக்கும் இடையே, அதி தீவிர புயலாக கரையை கடக்க உள்ளது புயல் கரையை கடக்கும் போது மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் காற்று வீசும், மிக பலத்த மழை பெய்யும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றே ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதேபோல் வங்கதேச நாட்டிலும் கனமழை பெய்து வருகிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை விமானத்தின் வருகை மற்றும் புறப்பாடு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், கடலோர பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணியருக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது