விசாகப்பட்டினத்தை மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் தாக்கிய ஹூட்ஹூட் புயல்! ஒடிஷாவிலும் சேதம்!!
விசாகப்பட்டினம்/புவனேஸ்வர்: வங்க கடலில் மையம் கொண்டிருந்த ஹூட்ஹூட் புயல் நேற்று ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை தாக்கியது. அப்போது பலத்த மழையுடன் மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. இந்த புயலுக்கு மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர்.
வங்க கடலில் அந்தமான் அருகே சமீபத்தில் உருவான ‘ஹூட் ஹூட்' புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது. அந்த புயல் மேலும் வலுவடைந்து ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது.
நேற்று பகல் 11.30 மணி அளவில் விசாகப்பட்டினம் அருகே உள்ள புடிமட்கா என்ற இடத்தில் ஹூட் ஹூட் புயல் கரையை கடந்தது. அப்போது கனமழையுடன் மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கடலில் பல அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்ததால், கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த படகுகள் தூக்கி வீசப்பட்டன.
பலத்த மழை
விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களிலும், ஒடிசாவில் உள்ள கஞ்சம், பூரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டியது.
வெள்ளக்காடான நகரங்கள்
விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. புயல், கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. செல்போன் கோபுரங்கள் நாசமாயின.
பலத்த சேதம்
சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் காற்றில் பறந்தன. சில இடங்களில் கடைகளின் கூரைகளும் சேதம் அடைந்தன. சில இடங்களில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்களை சூறாவளி காற்று தூக்கி வீசியது.
இருளில் மூழ்கின
விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின்சார கம்பங்களும், தொலைபேசி கம்பங்களும் சாய்ந்தன. இதனால் நகரம் இருளில் மூழ்கியது.
ரயில்- விமான சேவைகள் பாதிப்பு
சாலையில் இருந்த ஏராளமான மரங்கள் சாய்ந்ததால் விசாகப்பட்டினம்-அரகு சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. விசாகப்பட்டினம் விமான நிலையமும் பாதிப்புக்கு உள்ளானது.
5 பேர் பாதிப்பு
இப்புயலால் ஆந்திராவில் மூவரும் ஒடிஷாவில் இருவரும் பலியாகி உள்ளனர்
3 லட்சம் பேர் இடப்பெயர்வு
ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு 400 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
ஒடிசாவில் கடலோர மாவட்டங்களில் ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் தொடங்கி உள்ளன.
மீட்புப் பணி மும்முரம்
மழையின் வேகம் சற்று குறைந்த பின்னர் தீயணைப்பு படையினரும் மற்றும் மீட்புக்குழுவினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். கடற்படை வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் சாலைகளில் விழுந்து கிடந்த மரங்கள், மின் கம்பங்களை அப்புறப்படுத்தினார்கள்.
ஜார்க்கண்ட் நோக்கி...
புயல் கரையை கடந்த பின்னர் காற்றின் வேகம் சற்று குறைந்த போதிலும் மழை நீடித்தது. புயல் வடக்கு திசையில் நகர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தை நோக்கி சென்றது. இதனால் அந்த மாநிலத்திலும் மழை பெய்தது. நிலப்பகுதிக்குள் சென்று விட்டதால் புயல் படிப்படியாக வலுவிழந்து மழையும் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.