ஹூட்ஹூட் புயல்: உஷார் நிலையில் கடற்படை, விமானப்படை
விசாகப்பட்டினம்: ஹூட்ஹூட் புயல் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்த நிலையில் கடற்படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவின் துறைமுக நகரான விசாகப்பட்டினத்தை ஹூட்ஹூட் புயல் தாக்கியது. இதையொட்டி நகரில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று வீசியது. மேலும் கன மழையும் பெய்து வருகிறது. புயல் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிஸாவின் கோபால்பூர் இடையே கரையை கடந்தது. புயல் கோபால்பூர் இடையே கரையை கடந்தாலும் விசாகப்பட்டினத்தில் தான் புயலின் தாக்கம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 48 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கனமழைக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.