ஹூட்ஹூட்: ஆந்திராவில் சுற்றுச்சுவர், மரம் விழுந்து 3 பேர் பலி
விசாகப்பட்டினம்: ஹூட்ஹூட் புயல் தாக்கியதையொட்டி பெய்த கன மழைக்கு இதுவரை ஆந்திராவில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
வங்கக் கடலில் நிலை கொண்ட அதி பயங்கர ஹூட்ஹூட் புயல் இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை தாக்கியது. புயல் தாக்கியபோது விசாகப்பட்டினத்தில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று வீசியது. புயல் கரையை கடந்துவிட்டபோதிலும் விசாகப்பட்டினத்தில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மரங்கள் விழுந்து 2 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திராவின் கடற்கரையோர பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதனால் விசாகப்பட்டினம், விழியநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் ஒடிஸாவில் 4 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.