பாய்லின் புயல் தாக்கம்: பீகார், ஜார்கண்டில் கனமழை! கடும் வெள்ள எச்சரிக்கை
பாட்னா: பாய்லின் புயவால் ஒடிசா, ஆந்திரா மாநிலங்களில் ஏற்பட்ட சேதாரத்தைத் தொடர்ந்து தற்போது பீகாரில் கடும் மழையும், அதனைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளாது.
நேற்று முன் தினம் மாலை பாய்லின் புயல் கரை கடந்ததைத் தொடர்ந்து ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடும் கனமழை மற்றும் புயல் ஏற்பட்டது. தற்போது அம்மாநிலங்களில் பாய்லின் புயலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், பாய்லினின் தாக்கம் பீகார் பக்கம் திரும்பியுள்ளது.
இன்று காலை பாய்லின் புயல் பீகாரில் நிலை கொண்டிருந்தது. அது மேலும் வலுவிழந்து கரைந்து விடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இருந்தபோதும் பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிக் மற்றும் பாகூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பாகூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் கிரிதிக் மாவட்டத்தில் பாலத்தின் இரண்டு தூண்கள் உடைந்து விழுந்ததால் இர்கா ஆற்றுப்பாலம் உடைந்ததுள்ளன. இதனால் அங்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.