நெருங்கி வருகிறது பாய்லின் புயல்.. ஆந்திரா, ஒரிசாவில் ராணுவம் உஷார்
புவனேஸ்வர்: பாய்லின் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இந்தப் புயல் ஆந்திரா மற்றும் கடலோர ஒரிசா இடையே சனிக்கிழமை கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு மாநில கடலோரப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு ஒரிசாவைப் புயல் தாக்கியபோது எழுந்த அலைகளை விட அதிக உயரத்தில் அலைகள் இந்த முறை எழும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. 99 புயலின்போது ஒரிசாவில் 15,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 205 முதல் 215 கிலோமீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 மாநிலங்களிலும் ஐந்து மாவட்டங்களுக்கு ஆபத்து
ஆந்திராவைப் பொறுத்தவரை ஸ்ரீகாகுளம், ஒரிசாவில் கஞ்சம், பூரி, கொர்தா, ஜகதீஷ்சிங்காபூர் ஆகிய மாவட்டங்களில் புயல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முப்படைகளும் தயார்
புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்கவும், நிவாரணப் பணிகளில் ஈடுபடவும் ராணுவம், கடற்படை, விமானப்பட ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பேய் மழை
புயல் நெருங்கி விட்டதால் இரு மாநில கடலோரப் பகுதிகளிலும் பேய் மழை பெய்து வருகிறது கடலோரப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புயல் தாக்கும்போது அவசரகாலப் பணிகளுக்காக ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் இரு மாநிலங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.
நாளை மேலும் மழை வலுக்கும்
நாளை இரு மாநில கடலோரப் பகுதிகளிலும் மேலும் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு விடுமுறைகள் ரத்து
அடுத்த மாதத்திற்கான அரசு விடுமுறைகளை இரு மாநில அரசுகளும் ரத்து செய்துள்ளன. அனைத்து அரசு ஊழியர்களும் பணியில் இருக்குமாறும், புயல் நிவாரணப் பணிகளில் அவர்கள் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.