பாய்லின் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 14 நாட்கள் உணவு நிவாரண நிதி: நவீன் பட்நாயக் அறிவிப்பு
புவனேஸ்வர்: ஒடிசாவில் பாய்லின் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7 முதல் 14 நாட்கள் நிவாரண உணவு வழங்க அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று ஒடிசா மாநிலம் கோபால்பூரை 220 கி.மீ. வேகம் வரை தாக்கிய அதிகவேக பாய்லின் புயலுக்கு கிட்டத்தட்ட 17 பேர் உயிரிழந்துள்ளனர். புயலில் சிக்கி மொத்தம் 12 மாவட்டங்களை சேர்ந்த 14 514 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், கனமழையால் 5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயரிடப்பட்டிருந்த ரூ. 2400 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளது.
எனவே பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு நிவாரணநிதி வழங்க உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்.
அதிக சேதாரம்...
பாய்லின் புயல் காரணமாக நேற்று வட மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்தது. இதில், ஒடிசாவில்தான் அதிகபட்ச மழை பெய்துள்ளது. அதிலும் குறிப்பாக கஞ்சம் மாவட்டத்தில் சேதாரம் அதிகமாக கணக்கிடப் பட்டுள்ளது.
உணவு நிவாரண நிதி....
இந்நிலையில் இன்று ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள தகவலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு நிவாரண நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
50கி அரிசியும், ரூ400ம்....
அதில், பாய்லின் புயலால் அதிகமாக சேதாரத்தைச் சந்தித்துள்ள மாவட்டங்களில் தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50கி அரிசியும், பருப்பு உள்ளிட்ட இதர சாமான்களை வாங்குவதற்கு ரூ 400ம் வழங்கப்படும். இது அக்குடும்பத்திற்கான 14 நாட்கள் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாக அமையும்.
25கி அரிசியும், ரூ200ம்....
அதே போல், புயலால் குறைந்த அளவு சேதாரத்தைச் சந்தித்துள்ள மாவட்டங்களில் தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 கி அரிசியும் இதரத் தேவைகளுக்கு ரூ200ம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
மீனவக்குடும்பங்களுக்கு...
மேலும், மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்று பாய்லின் புயலால் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினருக்கும் தலா 10கி அரிசி வழங்க உத்தரவிட்டுள்ளார் நவீன் பட்நாயக்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
1,02,65,872 மக்கள் ஒடிசாவில் பாய்லின் புயலால் பாதிக்கப் பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.