'காத்ரீனா'வைப் போல பெரியதாம் பாய்லின் புயல்!
டெல்லி: அமெரிக்காவைத் தாக்கிய காத்ரீனா புயலைப் போலவே தற்போது ஆந்திரா, ஒரிசாவை மிரட்டிக் கொண்டிருக்கும் பாய்லின் புயலும் இருப்பதாக வெளிநாட்டு ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதி தீவிரப் புயலான பாய்லின், ஆந்திரா மற்றும் ஒரிசா கடற்கரைக்கு இடைப்பட்ட பகுதியில் நாளை கரையைக் கடக்கவுள்ளது.
இந்தப் புயலை மிகப் பயங்கரமான புயலாக கருத முடியாது என்று வானிலை ஆய்வு மையம் கூறினாலும் கூட மிக பலத்த காற்று வீசக் கூடும் என்று எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் பாய்லின் புயல், அமெரிக்காவைத் தாக்கி காத்ரீனாவைப் போல பெரிய புயல் என்று வெளிநாட்டு ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாஷிங்டன் போஸ்ட்
வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், நிச்சயம் இது பேரழிவை ஏற்படுத்தக் கூடிய புயல்தான். காத்ரீனாவைப் போலத்தான் இதுவும். இந்தியாவை இது நெருங்கிக் கொண்டிருக்கிறது.
மிக வேகமாக வலுவடைந்த புயல்
இந்தப் புயலானது மிக வேகமாக வலுவடைந்து வேகமாக நகர்ந்து வருகிறது.
18 மணி நேரத்தில் 80 மைல் வேகத்தில் நகர்வு
இந்தப் புயல் கடந்த 18 மணி நேரங்களில் மணிக்கு 80 மைல் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதுவே அதன் உக்கிரத்தின் விஸ்வரூபத்தை புரிந்து கொள்ள உதவும்.
தீவிரமானது மட்டுமல்ல, மிகப் பெரியதும் கூட
இந்தப் புயல் தீவிரமானது மட்டுமல்ல, மிகப் பெரிய புயலும் கூட என்று அந்த செய்தி கூறுகிறது.
வால் ஸ்ட்ரீட்டும் எச்சரிக்கை
இதேபோல வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையும் இதுஅதி தீவிரப் புயல் என்று எச்சரித்து செய்தி வெளியிட்டுள்ளது.
200 கி.மீ வேகத்தில் காற்று வீசும்
இதற்கிடையே, புயல் நெருங்கி வரும் நிலையில், மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தி்ல பலத்த காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
புயல் தாக்கும்போது 230 கி.மீ வேகமாக உயரும்
அதேசமயம், புயல் கரையைக் கடக்கும்போது, அதாவது தாக்கும்போது மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் மிக பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் புயலாக மாறுகிறது
இந்திய வானிலை மைய தலைவர் ரத்தோர் இதுகுறித்துக் கூறுகையில், காத்ரீனா அளவுக்கு இப்போதைக்கு இந்தப் புயல் இல்லை. அதேசமயம், அதே அளவிலான அதாவது சூப்பர் புயலாக தற்போது அது மாறி வருவதாகவே கருதுகிறோம் என்றார்.