அடேங்கப்பா... வங்க கடலில் கிளம்பி கோவா அருகே அரபிக் கடலில் நாளை கரையை கடக்கும் வர்தா புயல்!
வங்கக் கடலில் உருவான வர்தா புயல் தற்போது கர்நாடகாவில் பயணிக்கிறது. இப்புயல் நாளை கோவாவில் அரபிக் கடலில் கரையை கடக்கிறது.
பெங்களூர்: சென்னையில் ருத்ரதாண்டவமாடிய வர்தா புயல் நேற்று இரவு முதலே பெங்களூரை பதம் பார்க்க தொடங்கியது. இன்று கர்நாடகா மாநிலப் பகுதிகளை தாக்கிவிட்டு நாளை கோவா வழியாக அரபிக் கடலில் கரையை கடக்கிறது வர்தா புயல்.
வர்தா புயல்... இது ஏற்படுத்தியிருக்கும் வடுவை சென்னை மாநகரம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது... பேரிரைச்சலுடன் கனமழை, பேய்க்காற்று, தூக்கி எறியப்பட்ட வாகனங்கள், பெயர்ந்து விழுந்த கட்டிட முகப்புகள்.. முடங்கிப் போன இயல்பு வாழ்க்கை, மின்சாரமே இல்லாமல் 3 நாட்களாக தொடரும் துயம்.. இத்தனையும் வர்தா புயல் வாரிக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறது.
இப்புயல் நேற்று இரவு 7 மணிக்கு கரையை முழுமையாக கடந்தது. கரையைக் கடந்த புயலானது திருவண்ணாமலை மாவட்டம் வழியாக பெங்களூருவையும் தட்டிப் பார்த்தது. பெங்களூருவில் விடிய விடிய மழையை தந்திருக்கும் வர்தா இன்று கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகளைத் தாக்க உள்ளது.
இதன் பின்னர் நாளை தெற்கு கோவா வழியாக அரபிக் கடலில் கரையை கடக்கிறது வர்தா புயல் என்று கோவா வானிலை ஆய்வு மைய இயக்குநர் எம்.எல். ஷாஹூ தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் கிளம்பி தரைவழியாக கர்நாடகாவைத் தாக்கி கோவாவில் அரபிக் கடலில் கரையைக் கடக்கிற அளவுக்கு மிகப் பெரிய புயலாக இருந்துள்ளது 'வர்தா'.