அரபிக் கடலில் வாயு புயல்.. இந்திய துறைமுகங்களில் தஞ்சமடையும் சீனா கப்பல்கள்!
ரத்தினகிரி: அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள வாயு புயலில் இருந்து தப்பிக்க இந்திய துறைமுகங்களில் சீனாவின் கப்பல்கள் தஞ்சம் கோரியுள்ளன.
அரபிக் கடலில் உருவாகி உள்ள வாயு புயல் நாளை முதல் வரும் 14-ந் தேதி வரை குஜராத்தின் சவுராஷ்டிரா-கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மிக பலமான புயல் காற்றும் கனமழையும் கொட்டித் தீர்க்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் நாளை மறுநாள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரிக்கும் வந்தது நிபா: அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி.. மக்கள் பீதி
இதனிடையே அரபிக் கடலில் பயணித்த 10 சீனாவின் கப்பல்கள், புயலில் இருந்து தப்பிக்க இந்திய துறைமுகங்களில் தஞ்சம் கோரியுள்ளன. மகாராஷ்டிராவின் ரத்தினகிரி துறைமுகத்தில் 10 சீனாவின் கப்பல்கள் மனிதாபிமான உதவிகளை கோரியுள்ளதாக கடலோர காவல்படை ஐஜி கே.ஆர். சுரேஷ் கூறியுள்ளார்.
வாயு புயல் கரையைக் கடைக்கும் போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும்; இதனால் குஜராத் உள்ளிட்ட மேற்கு கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.