வாயு புயல் குஜராத்தை தாக்காது.. ஒரு நாள் இரவில் மாறிய வானிலை.. ஆனால்
Recommended Video
அஹமதாபாத்: இன்று கரையை கடக்கும் என கூறப்பட்ட வாயு புயல் குஜராத்தை தாக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரே நாள் இரவில் காற்றின் சுழற்சியில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக வேறு திசையை நோக்கி புயல் பயணிக்கிறது. அதேநேரம் குஜராத்தின் வேராவால் மற்றும் போர்பந்தர் கடற்கரை பகுதி அருகே வாயு புயல் இன்று மதியம் கடந்து செல்லும் என்பதால் குஜராத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை காரணமாக அரபிக்கடலில் உருவான வாயு புயல் குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மாகுவா பகுதியில் இன்று கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. இதனால் வோரா மற்றும் டியூ இடையே உள்ள பகுதியில் வாயு புயலின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று ஒரே நாள் இரவில் வாயு புயலின் திசை மாறியுள்ளது. காற்றின் திசை வேகத்தில் நிகழ்ந்த மாறுபாடு காரணமாக குஜராத்தில் புயல் கரையை கடக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் குஜராத்தின் வேராவால் மற்றும் போர்பந்தர் கடற்கரை பகுதிகளுக்கு மிக அருகே வாயு புயல் இன்று மதியம் கடந்து செல்லும் என்பதால் குஜராத் கடற்கரை மாவட்டங்களில் அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வாயு புயல் காரணமாக கடலில் அலையின் வேகம் மிக அதிமாக இருக்கும் என்றும், குஜராத்தில் சூறாவளி காற்றுடன் மிககனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக புயல் மற்றும் கனமழை பாதிப்பில் இருந்து மக்களை காக்க தற்காலிகமாக 3 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தங்குவதற்காக உணவு மற்றும் உறைவிட வசதிகளுடன் குஜராத்தில் 700 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதீதீவிரமான இந்த புயல் காரணமாக பலத்த காற்றுடன் மிக கனமழையும் குஜராத்தில் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாயு புயல் காரணமாக மும்பைக்கு வந்து செல்லும் விமானங்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. மும்பையில் விமான சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.