கடும் சேதத்தை ஏற்படுத்திய ஃபனி புயல்... 240 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது
Recommended Video
புவனேஸ்வர் ஃபனி புயல் ஒடிசாவின் பூரி கடலோர பகுதிகளில் இன்று காலை 11 மணிக்கு 240 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது. இதில், ஒடிசாவின் கந்தாமால் மாவட்டம் கடும் விளைவை சந்தித்துள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மின்கம்பங்கள் தூக்கி வீசப்பட்டன. வீடுகள் மற்றும் ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன.
வங்கக் கடலில் உருவான ஃபனி புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகர்ந்தது. கோபால்புர் மற்றும் பூரியின் தெற்கே உள்ள சந்த்பாலி இடையே இன்று புயல் கரையைக் கடந்தது. அப்போது மாநிலத்தின் பல இடங்களில் பலத்த மழையுடன் சூறைக்காற்று வீசியது.
புயல் வீசும் போது அதிகபட்சமாக 240 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. புயல் கரையை கடந்த பின்னர் மீண்டும் வடகிழக்கே நகர்ந்து வலுவிழுக்கும் என்றும் அதன் பின்னர் மேற்கு வங்கத்தை தாக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஃபனி புயலால் 10 ஆயிரம் கிராமங்களும், 52 நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும் என கணிக்கப்பட்டது. இதையடுத்து அம்மாநிலத்தில் உச்சக்கட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
புயல் கரையைக் கடக்கிறது
கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 11 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான பகுதிகளுக்கும் புயல் நிவாரண முகாம்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். இதே போன்று ஒடிசா தலைநகரான புவனேஸ்வரில் இருந்து விமானங்கள் எதுவும் புறப்படவில்லை. விமான நிலையம் நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளது.
மின்சார சேவை துண்டிப்பு
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் புயல் நிவாரண பாதுகாப்பு மையங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு, நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். பாதுகாப்பு கருதி ஒடிசாவின் கரையோர பகுதிகளுக்கு மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. புயல் நீங்கிய பிறகு மின்சார இணைப்புகள் படிப்படியாக சீர் செய்யப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
233 ரயில்கள் ரத்து
கொல்கத்தா விமான நிலையம் நேற்றிரவு முதல் மூடப்பட்டுள்ளது 24 மணி நேரம் இந்த விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா துறைமுகமும் மூடப்பட்டுள்ளது. வடகிழக்கு ரயில்வே 233 ரயில்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
நிவாரணப் பொருட்கள்
ஃபனி புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்கவும் நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லவும் அனைத்து விமான நிறுவனங்களும் தயார் நிலையில் இருக்கும்படி மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு கேட்டுக் கொண்டுள்ளார். விமான சேவைகளுக்கான கட்டுப்பாட்டு அறை ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
54 குழுக்கள் தயார்
ஆந்திரா, ஒடிசா, அந்தமான் நிகோபார், ஜார்க்கண்ட், கேரளா, ஒடிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 54 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி ஆலோசனை
ஃபனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர், பிரதமரின் முதன்மைச் செயலர், உள்துறை செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகள், தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவ, கடற்படை அதிகாரிகள் தொலைத்தொடர்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புயல் காரணமாக பிரதமர் மோடியின் ஜார்க்கண்ட் பிரச்சாரப் பயணம் ஒருநாள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.