மும்பையில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி; 3 பேர் படுகாயம்!
மும்பை: மும்பையின் புறநகர்ப் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பையின் புறநகர் பகுதியான சான்டாகுரூஸில் உள்ள குடிசைப்பகுதி கோலிபர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் வசிக்கும் இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
அந்த வீட்டில் இருந்த 4 பேர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் லேசான காயம் அடைந்தனர். 90 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய ஒருவரை பொதுமக்கள் மீட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
ராஜ்தேவ் தீக்சித், அவரது சகோதரர் கபில் தீக்சித், மகன்கள் யஷ்வந்த் தீக்சித் மற்றும் ஜீத்து தீக்சித் ஆகியோர் உயிரிழந்ததாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோலிபர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.