என் தரப்பு நியாயத்தை கேட்கவில்லை.. டாடா சன்ஸ்சுக்கு அனுப்பிய இ-மெயிலில் சைரஸ் மிஸ்திரி காட்டம்!
டெல்லி: டாடா சன்ஸ் நிறுவன தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரி அந்த நிறுவன போர்டு உறுப்பினர்களுக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.
டாடா சன்ஸ் நிறுவன தலைவர் பதவியிலிருந்து திடீரென சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். இதையடுத்து டாடா நிறுவனத்திற்கு எதிராக அவர் வழக்கு தொடர கூடும் என்ற அச்சத்தால், கேவியட் மனுக்களை பல்வேறு நீதிமன்றங்களில் டாடா நிறுவனம் போட்டுள்ளது.
தற்போதைய சூழலில் வழக்கு எதுவும் தொடரப்போவதில்லை என சைரஸ் மிஸ்திரி தரப்பு கூறியுள்ள நிலையில், நிறுவன போர்டு உறுப்பினர்களுக்கு மிஸ்திரி இ-மெயில் அனுப்பியுள்ள தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்த இ-மெயிலில், இது ஒரு வினோதமான, முன் உதாரணம் இல்லாத டிஸ்மிஸ் நடவடிக்கை என்று மிஸ்திரி சுட்டிக் காட்டியுள்ளார். இந்த நடவடிக்கை தனக்கு ஷாக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். எனது தரப்பு நியாயத்தை எடுத்துக்கூற நேரம் தராமலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
9 போர்டு உறுப்பினர்களை கொண்ட டாடா சன்ஸ்சில், மிஸ்திரி நீக்கத்திற்கு ஆதரவாக 6 பேர் வாக்களித்திருந்தனர். இருவர் நடுநிலை வகித்தனர். மிஸ்திரி வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.