பதவி நீக்கத்திற்கு சைரஸ் மிஸ்திரி தடை கோர வாய்ப்பு.. முன்கூட்டியே கோர்ட்டை அணுகியது டாடா சன்ஸ்
டெல்லி: டாடா சன்ஸ் நிறுவனத்திலிருந்து சைரஸ் மிஸ்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டதை தடை கோருவதை தடுக்கும் வகையில் டாடா சன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
சைரஸ் மிஸ்திரி நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவுக்கு அவர் தடை வாங்கக்கூடும் என்பதால் டாடா நிறுவனம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.
சுப்ரீம் கோர்ட், டெல்லி ஹைகோர்ட் மற்றும் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்திலும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது டாடா சன்ஸ் நிறுவனம்.
அதேபோல சைரஸ் மிஸ்திரியும், ரத்தன் டாடா, தோரப்ஜி டாடா அறக்கட்டளை ஆகியவற்றுக்கு எதிராக 4 கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக சில டிவி சேனல்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால் இதை மிஸ்திரியின் குடும்ப நிறுவனமான சபூர்ஜி பல்லோன்ஜி குரூப் மறுத்துள்ளது. நிலைமையை தாங்கள் பரிசீலித்து வருவதாகவும் மீடியாக்களில் வெளியானதை போல வழக்கு எதையும் தொடரவில்லை என்றும், எப்போது பொதுவெளியில் அறிக்கை வெளியிட வேண்டும் என்ற அவசியம் எழுகிறதோ அப்போது அதை வெளியிடுவோம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.