சைரஸ் மிஸ்திரி பதவி நீக்கத்தால் ஆட்டம் காணும் டாடா குழுமம்.. இரு நாட்களில் ரூ.17000 கோடி இழப்பு
டெல்லி: சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மார்க்கெட் மதிப்பு சுமார் ரூ.17000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.
மிஸ்திரியின் திடீர் நீக்கம், டாடா நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிட்டதே இந்த இழப்புக்கு காரணம் என கூறப்புடகிறது. ரத்தன் டாடா அந்த நிறுவன இடைக்கால தலைவர் என்ற பொறுப்பை எடுத்துக்கொண்டாலும், இந்த இழப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
டாடா குழுமத்தின் டாப் நிறுவனம் என வர்ணிக்கப்படும் டிசிஎஸ் பங்குகள் கடந்த இரு நாட்களில் 1.6 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது. இதன் இழப்பு மதிப்பு ரூ.7,788 கோடியாகும். போலவே, டாடா மோட்டார்ஸ் ரூ.6100 கோடி மார்க்கெட் மதிப்பை இழந்துள்ளது.
டாடா ஸ்டீல்ஸ் ரூ.1,431 கோடி இழப்பையும், டைடன் ரூ.906 கோடி இழப்பையும், டாடா பவர் ரூ.607 கோடி இழப்பையும் சந்தித்துள்ளது. வருங்காலங்களில் இந்த மதிப்பு மீட்டெடுக்கப்படும் என டாடா நம்பிக்கை தெரிவிக்கிறது.
4 வருட காலம் தலைமை பொறுப்பிலிருந்த சைரஸ் மிஸ்திரி திடீரென நீக்கப்பட்டதற்கான காரணங்களை டாடா வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.