மரியாதையாக நீங்களே ராஜினாமா செய்யுங்கள்.. சைரஸ் மிஸ்திரிக்கு டாடா சன்ஸ் கொடுத்த கடைசி வாய்ப்பு!
மும்பை: மரியாதையாக ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள் எனும் வாய்ப்பை சைரஸ் மிஸ்திரிக்கு கொடுத்தோம் என்று டாாடா சன்ஸ் கூறியுள்ளது. அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தாததால் சைரஸ் மிஸ்திரியை பணி நீக்கம் செய்ய நேர்ந்ததாக டாடா சன்ஸ் கூறுகிறது.
2012ல் டாடா சன்ஸ் நிறுவன தலைவராக நியமிக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரி, நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்களால் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கள்கிழமை இத்தகவல் வெளியானது.
சைரஸ் மிஸ்திரி சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடும் என்பதால், டாடா சன்ஸ் முன்கூட்டியே பல கோர்ட்டுகளில், கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், ராய்ட்டர் செய்தி நிறுவனம் ஒரு புது தகவலை வெளியிட்டுள்ளது.
சைரஸ் மிஸ்திரி நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்ததால் ரத்தன் டாடாவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு வெடித்திருந்ததாம். மோதல் முற்றியதால், சைரஸ் மிஸ்திரியை பணியிலிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளார் ரத்தன் டாடா. சைரஸ் மிஸ்திரிக்கு, ராஜினாமா செய்யும் வாய்ப்பை போர்டு குழு வழங்கியதாகவும், அதை ஏற்க மறுத்து இழுபறியை கொண்டுவந்ததால் வேறு வழியின்றி டிஸ்மிஸ் செய்யும் முடிவுக்கு போர்டு தள்ளப்பட்டதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளது அந்த செய்தி நிறுவனம்.
அதேநேரம், தன்னை நியாயத்திற்கு புறம்பாக பதவி நீக்கம் செய்துவிட்டதாக டாடா சன்ஸ் போர்டு உறுப்பினர்களுக்கு சைரஸ் மிஸ்திரி இ-மெயில் அனுப்பி வைத்திருந்ததும், இந்தியாவிலே இல்லாத நடைமுறையாக, தன்னை பதவியிலிருந்து திடீரென நிர்வாகம் நீக்கியுள்ளதாக குமுறியிருந்ததும் நினைவிருக்கலாம்.