பிசிசிஐ நிர்வாகியிடம் ரூ. 100 கோடி கேட்டு மிரட்டிய தாவூத் கும்பலைச் சேர்ந்த 2 பேர் ஆந்திராவில் கைது
டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகியிடம் ரூ. 100 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த தாவூத் இப்ராகிம் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை டெல்லி போலீஸார் ஆந்திராவில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
இந்த இருவரும் அந்த கிரிக்கெட் வாரிய நிர்வாகியை இரவு பகலாக கடந்த சில வாரங்களாக விடாமல் தொலைபேசி மூலமும், இமெயில் மூலம் மிரட்டி வந்ததாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஷேக் மற்றும் பதே ஆகிய இருவரும் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர்கள். இருவரையும் போலீஸார் டெல்லிக்குக் கொண்டு வந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
பதே மற்றும் ஷேக் ஆகிய இருவரும் தாவூத் இப்ராகிம் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் நிர்வாகிக்கு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். ரூ. 100 கோடி தர வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இவர்கள் மிரட்டி வந்துள்ளனர்.
பல்வேறு செல்போன் எண்களிலிருந்து அடுத்தடுத்து இரவு பகல் பாராமல் தொடர்ந்து பேசி மிரட்டி வந்துள்ளனர். நள்ளிரவிலும் கூட போன் செய்து மிரட்டியுள்ளனர். மேலும் அடுத்தடுத்து இமெயில்கள் மூலமும் மிரட்டல் விடுத்து வந்தனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸில் அந்த நிர்வாகி புகார் கொடுத்தார். இதையடுத்து டெல்லி போலீஸ் குழு ஒன்று ஆந்திரா விரைந்தது. மேலும் கிரிக்கெட் நிர்வாகிக்கும், அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா விரைந்த டெல்லி போலீஸ் குழு தற்போது சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்து டெல்லிக்குக் கொண்டு வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பதே மற்றும் ஷேக் ஆகிய இருவரும் நெல்லூரில் சிறிய அளவிலான பிசினஸில் ஈடுபட்டு வருபவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவருக்கும் தாவூத் கும்பலுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.