டி.கே.ரவி ஐ.ஏ.எஸ் மரணம் தற்கொலைதான்: சிபிஐ அறிக்கை - தாயார் மறுப்பு
பெங்களூரு: ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ரவியின் மரணம் தற்கொலைதான் என்றும் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு அதிகாரிகளின் அழுத்தம், அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கும் ஆதாரம் இல்லை என்றும் பெங்களூருவில் சிபிஐ நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. சிபிஐ விசாரணை அறிக்கை ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி, 34 பெங்களூருவில் வணிக வரித்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.
மணல் மாபியா கும்பலின் மிரட்டல், அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல் ஆகியவையோ ரவியின் மரணத்திற்குக் காரணம் என்று கூறப்பட்டது. சக ஐஏஎஸ் அதிகாரியுடனான காதல் பிரச்சினைதான் தற்கொலைக்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால், சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.
கடந்த 6 மாதங்களாக நடை பெற்ற சிபிஐ விசாரணையில், டி.கே.ரவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதிகாரிகளின் அழுத்தம், அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கும் ஆதாரம் இல்லை என்று தெரியவந்துள்ளது. தனிப்பட்ட முறையிலும், குடும்பத்திலும் ரவிக்கு பல பிரச்சினைகள் இருந்தது. இதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.
சிபிஐ அதிகாரிகள், ரவியின் வழக்கு தொடர்பாக அறிக்கை தயாரித்து டெல்லியில் உள்ள தலைமையகத்துக்கு அனுப்பியுள்ளனர். இந்த அறிக்கை ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாயார் குற்றச்சாட்டு
இதனிடையே எனது மகன் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல என்று டி.கே.ரவியின் தாயார் கவுரம்மா குற்றம்சாட்டியுள்ளார். எனது மகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதால் தான் சி.பி.ஐ. விசாரணை நடத்த மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அரசும் தீவிரமாக ஆலோசித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. தற்போது சி.பி.ஐ. விசாரணையிலும் எனது மகன் தற்கொலை செய்திருப்பதாக கூறுகிறார்கள். இதனால் சி.பி.ஐ. விசாரணை நடத்தியும் உரிய நியாயம் கிடைக்கவில்லை.
மறுபிரேத பரிசோதனை
எனது மகன் உடலை சி.பி.ஐ. அதிகாரிகள் தோண்டி எடுத்து விசாரிக்கவும் இல்லை, மறுபிரேத பரிசோதனையும் செய்யவில்லை. சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணை, விக்டோரியா மருத்துவமனையில் முதலில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலமே சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் தான் என்னுடைய மகன் தற்கொலை செய்திருப்பதாக கூறுகிறார்கள். எனது மகன் தற்கொலை செய்யவில்லை என்றும் கண்ணீர் மல்க கூறியுள்ளார் கவுரம்மா.