கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி கொலை செய்யப்படவில்லை?.. சிபிஐ அறிக்கை தயார்!
பெங்களூர்: கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி மரணத்தில் சதி ஏதும் இல்லை என்று சிபிஐ கண்டறிந்துள்ளது.
கர்நாடக வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக பணியாற்றிய இளம் ஐஏஎஸ் அதிகாரியான டி.கே.ரவி கடந்த மார்ச் மாதம் தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நேர்மையான அதிகாரி என்பதால், அவரால் பாதிக்கப்பட்ட மணல் அல்லது ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் கொலை செய்திருக்கலாம் என்று எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டி போராட்டங்கள் நடத்தினர். சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க கோரினர்.
கர்நாடக சிஐடி போலீசார் முதல்கட்ட விசாரணையை முடித்துவிட்டு, வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து போராட்டங்கள் ஓய்ந்தன.
இந்நிலையில் ரவி உடல் ஏற்கனவே பெங்களூர் அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், அகில இந்திய மெடிக்கல் அசோசியேசன் மருத்துவர்களால் மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சோதனைகளில், ரவி தற்கொலை செய்திருக்கவே வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டது.
ரவியின் தொலைபேசி உரையாடல்களை சிபிஐ சோதித்து பார்த்தபோதிலும், கொலைக்கான முகாந்திரம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஜூலை மாதம் சிபிஐ தனது விசாரணை அறிக்கையை அரசிடம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.