காங்.-மஜத எம்எல்ஏக்களை பாஜக வலையில் இருந்து பாதுகாத்த டிகே சிவகுமாருக்கு என்ன பதவி?
சிவகுமார், பணிகளை பாராட்டி அவருக்கு கர்நாடக மாநில தலைமை பொறுப்பை வழங்க காங்கிரஸ் முன்வந்துள்ளது. அதிக அதிகாரம் உள்ள அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
பெங்களூர்: காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் பத்திரமாக பாதுகாத்து, பாஜக வலைவீச்சில் இருந்து தப்பிக்க வைத்த காங்கிரஸ் சீனியர் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் தலைமை பொறுப்பும் அவருக்கே வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் வேகத்தில், காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களுக்கு வலை வீசியபோது, அவர்களை ரிசார்ட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தது டி.கே.சிவகுமார்.
ஏற்கனவே குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலின்போது, காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக வலை வீசியபோது கர்நாடகாவில் பாதுகாப்பாக வைத்திருந்தவர் டி.கே.சிவகுமார்தான். காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமானவர். தொழிலதிபரும் கூட.
சிவகுமாரும், குமாரசாமியை போலவே ஒக்கலிக ஜாதியை சேர்ந்தவர். இருவரும் அருகருகே உள்ள தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள்.
சிவகுமார் தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கைவிடுத்திருந்தார். ஆனால், முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்தால் பிற ஜாதி மக்களிடம் அரசு அதிருப்தியை சம்பாதிக்கும் என்ற முடிவுக்கு காங்கிரஸ் தலைமை வந்துள்ளது.
அதேநேரம், சிவகுமார், பணிகளை பாராட்டி அவருக்கு கர்நாடக மாநில தலைமை பொறுப்பை வழங்க காங்கிரஸ் முன்வந்துள்ளது. அதிக அதிகாரம் உள்ள அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.