ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: 9 நிறுவனங்களின் மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு- தீர்ப்புக்கு தடை வருமா?
பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள 9 நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவினை கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
லெக்ஸ் உள்ளிட்ட 9 நிறுவனங்கள் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உரிய விசாரணையின்றி தங்கள் நிறுவன சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அதுவரை ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீது தொடரப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மனுவினை விசாரித்த நீதிபதி அர்விந்த் குமார், இது தொடர்பாக வரும் 10ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மனு மீதான அடுத்த கட்ட விசாரணை அன்றைய தினமே தொடங்க உள்ளது.
தீர்ப்பு நாள் திக் திக்
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. தீர்ப்பு நாள் நெருங்க நெருங்க திக் திக் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
சென்னை டூ பெங்களூரு
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தொடக்கப் புள்ளி சுப்பிரமணியன் சுவாமிதான்.
21.6.1996-ம் தேதி அன்று, சுப்பிரமணியன் சுவாமி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முடிவுக்கட்டத்தை எட்டியுள்ளது.
தடையா? தள்ளிவைப்பா?
இந்த நிலையில் 'மேற்கொண்டு இந்த வழக்குக்குத் தடை வாங்க முடியுமா? தீர்ப்பின் தேதியை ஒத்திவைக்க முடியுமா? தீர்ப்பு வழங்கும் அன்றைய தினத்தில் ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு வருவாரா, மாட்டாரா?' என்பதுபற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் தமிழக அரசியல் களத்திலும் வழக்கறிஞர்கள் மட்டத்திலும் உலா வருகின்றன.
9 நிறுவனங்கள் மனு தாக்கல்
இந்த நிலையில் மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே, கிரீன் ஃபார்ம்ஸ் ஹவுஸ், சைனோரா, ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். அதுவரை இந்த சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்தக் கம்பெனிகள் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டுச்சதியை நீக்க
அதே சமயம் 'குற்றப்பத்திரிகையில் இருந்து, கூட்டுச் சதி மற்றும் கூட்டுச் சதிக்குக் தூண்டுதல் என்ற குற்றத்தை நீக்க வேண்டும். அதுவரை ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என்ற வழக்கும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எட்டிப்பார்க்கும் நம்பிக்கை
முன்னதாக, மனுதாரர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்திருந்தனர்.
எனினும், அந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படாமல் சிறப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவே குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சிறிதளவு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாம்.
சட்ட ஆலோசனையில்
இந்த இரண்டு வழக்கின் மூலமாகச் சொத்துக் குவிப்பு வழக்குக்கு இடைக்காலத் தடை வாங்க முடியுமா? அல்லது தீர்ப்புத் தேதியைத்தான் மாற்ற முடியுமா? என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
நீதிமன்றத்தின் கதவுகள்
ஒருவேளை இந்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்றாலும் தீர்ப்பின் தேதியை மாற்றவோ, இடைக்காலத் தடை விதிக்கவோ மாட்டார்கள்.
அதனால், இனி இந்த வழக்கை தாமதப்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டன என்றும் சொல்லப்படுகிறது.
தடை விதிக்க முடியுமா?
''பொதுவாகவே இந்திய நீதிமன்றங்களில் கீழ் நீதிமன்றங்கள் தீர்ப்பு தேதி அறிவித்துவிட்டால், உயர் நீதிமன்றங்களாக இருந்தாலும் சரி, உச்ச நீதிமன்றமாக இருந்தாலும் தலையிட மாட்டார்கள். அதை மீறி இந்த வழக்குக்குத் தடைவிதிக்கிறது என்றால், வழக்கை நீதிபதி ஒருதலைபட்சமாக நடத்தினார் என்பதை நிரூபித்தால் மட்டுமே தடைவிதிக்க முடியுமாம்.
அரசு தரப்பு வாதம்
ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்புக்கு முழுச் சுதந்திரம் தரப்பட்டது. அரசு தரப்பு 15 நாட்கள் மட்டுமே இறுதி வாதங்கள் வைத்தார்கள்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாதம்
ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு 42 நாட்கள் இறுதி வாதம் வைக்க அனுமதிக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் நீதிபதி முழுமையாகக் கேட்டிருக்கிறார். அதனால், இதனைக் காரணமாகக் காட்டி இந்த வழக்குக்கு இடைக்காலத்தடை விதிப்பது என்பது முடியாத காரியம்'' என்றும் கூறுகின்றனர்.
நீதிமன்றத்தில் தீர்மானம்
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அமர்வில், 'ஒரு வழக்கின் தீர்ப்பு தேதி அறிவித்துவிட்டால் அதில் எந்த நீதிபதியும் தலையிடக் கூடாது' என்று தீர்மானமே போட்டிருக்கிறார்கள்.
நீதிபதியின் தீர்ப்பு
''நீதிபதிக்கு தீர்ப்பு வழங்க கால அவகாசம் தேவைப்பட்டால் மட்டுமே தீர்ப்பின் தேதியை மாற்ற முடியும். ஆனால், அதற்கும் வாய்ப்பில்லையாம். கடந்த மூன்று மாதங்களாக காலை 11 மணி முதல் 2 மணி வரை நடைபெற்ற ஒவ்வொரு நாள் வாதத்தையும் அன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை நன்றாகப் படித்து அதை கம்ப்யூட்டரில் ஏற்றி வைத்துக்கொண்டாராம் நீதிபதி குன்ஹா.
செப்டம்பர் 20
'கர்நாடக குற்ற நடைமுறை சட்டத்தின்படி தீர்ப்பு வழங்க குறைந்தது 14 நாட்கள் தேவை. ஆனால், இந்த வழக்கில் நிறைய ஆவணங்கள் இருப்பதால் ஒரு வாரம் அதிகமாக எடுத்துக்கொண்டு 20-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன்' என்று தீர்ப்பு அறிவிப்பதற்கு முன்பே கால அவகாசத்தை எடுத்துக் கொண்டுள்ளார் நீதிபதி. அதனால், இனி தீர்ப்பு தேதியைத் தள்ளிவைக்க மாட்டார்'' என்றும் சொல்கிறார்கள்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள்
தீர்ப்பின் தேதியின்போது குற்றவாளிகள் தரப்பில் அனைவரும் ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் யாராவது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தால் தீர்ப்புத் தேதியை தள்ளி வைக்கலாம். அல்லது அன்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகளா? குற்றமற்றவர்களா? என்ற தீர்ப்பை மட்டும் அறிவித்துவிட்டு தண்டனை தேதியை பின்னால் அறிவிக்கலாம்.
தண்டனைக்காலம்
ஒருவேளை தண்டனைக்குரியவர்களாக இருந்தால் உடனே பிடிவாரன்ட் பிறப்பித்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தண்டனைக் காலத்தை அறிவிப்பார். ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் வராமல் தண்டனைக் காலத்தை அறிவிக்க முடியாது.
ஜெயலலிதா ஆஜராவார்?
இதனிடையே முதல்வர் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களோ,தமிழக முதல்வர் ஜெயலலிதா, நீதிமன்றங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறார். அதனால் அவசியம் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று கூறுகின்றனர். எங்கள் தரப்பினர் குற்றமற்றவர்கள். நிச்சயம் தீர்ப்பின் வெற்றி எங்களுக்குத்தான் என்றும் உறுதிபடக்கூறுகின்றனராம்.
எண்ணப்படும் நாட்கள்
எது எப்படியோ 18 ஆண்டுகாலம் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு இன்னும் 15 தினங்களில் வெளியாக உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பினர் மட்டும்மல்லாது தமிழகமே தீர்ப்புக்கான நாட்களை திக் திக் மனதோடு எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளது.