அரசியல் ஆதாயத்துக்காகவே ஜெ. மீது சொத்து குவிப்பு வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் வக்கீல் நாகேஸ்வரராவ்
டெல்லி: அரசியல் ஆதாயத்துக்காகவே தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதிட்டார்.
ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக கர்நாடகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் போது கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் தமது வாதங்களை முன்வைத்தனர்.
சொத்து குவிப்பு வழக்கின் முதல் புகார்தாரர் என்ற அடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமியும் தமது இறுதி வாதத்தை முன்வைத்தார். அன்பழகன் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தமது இறுதிவாதங்களை முன்வைத்து வருகிறார். அவர் இன்று தமது வாதத்தில், ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கே அரசியல் ஆதாயத்துக்காக போடப்பட்டதுதான்.
மற்றவர்கள் எல்லாம் வாங்கிய சொத்துகளுக்கு ஜெயலலிதா ஏன் விளக்கம் தர வேண்டும்? ஜெயலலிதாவின் சொத்துகளை மிகவும் அதிகமாக மதிப்பீட்டு செய்திருக்கிறார்கள். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் ஒரே வீட்டில் இருந்ததாலேயே பணபரிமாற்றம் நடைபெற்றதாக கூறுவதை ஏற்க முடியாது; அப்படி எந்த ஒரு பணபரிமாற்றமும் நடைபெறவில்லை.
சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் எந்த ஒரு வருமானமும் கிடையாது என்றார்.
6 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
இதனிடையே மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய கர்நாடகா அரசுக்கு உரிமை இல்லை என்ற ஜெயலலிதா தரப்பு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் 6 வார காலத்துக்கு ஒத்திவைத்துள்ளது.