10ம் வகுப்பில் மகன் பெயிலானதை பட்டாசு வெடித்து கோலாகலமாகக் கொண்டாடிய அப்பா!
தேர்வில் மகன் தோல்வியடைந்ததை பார்ட்டி வைத்துக் கொண்டாடியுள்ளார் ஒரு அப்பா.
Recommended Video
போபால்: மத்தியப்பிரதேசத்தில் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த மகன் மனமுடைந்து விடாமல் இருக்க, பட்டாசு வெடித்து, பார்ட்டி வைத்து அமர்க்களப் படுத்தியுள்ளார் தந்தை ஒருவர்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார் வியாஸ். இவரது மகன் அசு இந்தாண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில், அசு தோல்வியடைந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக தனது வீட்டை அலங்கரிக்கும்படி சுரேந்திர குமார் உத்தரவிட்டார். பின்னர், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அவர் விருந்துக்கு அழைத்து, மகன் அசுவை கேக் வெட்ட வைத்து, அனைவருக்கும் இனிப்புகள் கொடுத்தார்.
சுரேந்திரகுமாரின் இந்த நடவடிக்கையைக் கண்டு அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். மகன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டதோ என அவர்கள் குழப்பமடைந்தனர்.
ஆனால், மற்றவர்களை விட மிகத் தெளிவாகவே இருந்தார் சுரேந்திரகுமார். மகனுக்காக ஏற்பாடு செய்திருந்த விழாவில் பேசிய அவர், “இந்த தருணத்தில்தான் என் மகனுக்கு நான் ஆதரவாக இருக்க வேண்டும். தேர்வில் வெற்றிபெற, அவன் மேற்கொண்ட முயற்சியை நான் பாராட்ட விரும்பினேன். தேர்வுத் தோல்வி, மாணவர்களை தற்கொலை முடிவுக்குச் செல்லவைத்து விடுகிறது. இதற்காக, விலை மதிப்பில்லாத வாழ்க்கையை முடித்துக்கொள்ளக் கூடாது. தேர்வையும் தாண்டி, வாழ்க்கையில் சாதிக்க எவ்வளவோ இருக்கிறது'' என்றார்.
சுரேந்திரகுமாரின் இந்தப் பேச்சால் அவரது மகன் அசு மற்றும் விருந்து வந்திருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். “மீண்டும் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெறுவேன்” என அந்த நிகழ்ச்சியிலேயே தனது தந்தைக்கு அசு வாக்குறுதி அளித்தான்.
தேர்வில் தோல்வியடைந்த மகனை திட்டாமல், அவனை மீண்டும் தேர்வு எழுத உற்சாகப் படுத்திய சுரேந்திரகுமாரை அங்கிருந்தவர்கள் அனைவரும் பாராட்டினர்.
சுரேந்திரகுமாரைப் போன்று பிள்ளைகளின் தோல்வியை இப்படி பார்ட்டி வைத்துக் கொண்டாடவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அவர்களைத் திட்டாமலாவது இருப்பது நலம். அப்போது தான் தேர்வு முடிவுகளைக் கண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ள மாணவர்கள் எவரும் நினைக்க மாட்டார்கள் என்பது தான் மனோதத்துவ நிபுணர்கள் பெற்றோர்களுக்கு கூறும் அறிவுரை.