அவர்தான் முடிவு எடுப்பார்.. தீதிக்கு எதிராக தாதாவை களமிறக்க பிளான்.. அமித் ஷாவின் புராஜெக்ட் கங்குலி
கொல்கத்தா: ஏதாவது செய்து.. எப்படியாவது மேற்கு வங்கத்தை பிடித்துவிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.. இதற்காக வங்கத்து மக்கள் தங்களின் அக்காவாக கருதும் "தீதி" மமதாவை வீழ்த்த "தாதா" கங்குலியை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளது.
பாஜகவில் கங்குலி இணைய போகிறாரா? என்று கடந்த இரண்டு மாதங்களாக நிறைய கேள்விகள், விவாதங்கள் எழுந்து வந்தன. இதற்கு பின் பாஜக வேறு பல திட்டங்களை வகுத்து வருகிறது. பிசிசிஐ மூலம் இதற்காக பாஜக பல திட்டங்களை வகுத்து வந்து இருக்கிறது.
ஒருநாள், இரண்டு நாள் அல்ல கங்குலியை வைத்து கடந்த பல மாதங்களாக பாஜக இந்த திட்டங்களை போட்டது. மேற்கு வங்கத்திற்காக பாஜக கண்டிப்பாக "புராஜெக்ட் கங்குலியை'' களமிறக்கும் என்கிறார்கள்.. அது என்ன புராஜெக்ட் கங்குலி?
பாஜக
மேற்கு வங்கத்தில் வீழ்த்த முடியாத சக்தியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மமதா பானர்ஜியும் இருக்கிறார்கள். மமதாவின் வலிமையான இமேஜுக்கு எதிராக யாரை களமிறக்குவது என்பதுதான் பாஜகவின் யோசனையாக இத்தனை நாட்கள் இருந்து வந்தது. மேற்கு வங்க பாஜகவில் மமதாவை எதிர்க்கும் அளவிற்கு வலிமையான முகங்கள் எதுவும் இல்லை.
பீகார்
இதனால் அருகில் இருக்கும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆட்களை இறக்க பாஜக நினைத்தது. ஆனால் மேற்கு வங்க மக்கள் இதற்கு பெரிதாக மசியவில்லை. "இவங்கதான் வெளியூர் ஆட்ட காரங்களோ" என்று பக்கத்து மாநில பாஜக தலைவர்களை மேற்கு வங்க மக்கள் ஓரம்கட்டினார்கள் . இதையடுத்து பாஜக கொண்டு வந்த "பிளான்-பி"தான் கங்குலி.
நெருக்கம்
மேற்கு வங்கத்தின் மண்ணின் மைந்தன் கங்குலியை விட வேறு யாரும் கட்சிக்கு ஒரு வலிமையான முகமாக இருக்க முடியாது என்று பாஜக நினைக்கிறது. இவரை எப்படியாவது பாஜகவில் சேர்த்து தேர்தல் பிரச்சாரம் செய்ய வைக்கலாம், அல்லது முதல்வர் வேட்பாளராக கூட முன்னிறுத்தலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. கங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவி கூட இதை கருத்தில் கொண்டே கொடுக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.
பிசிசிஐ
பிசிசிஐ அமைப்பு மொத்தமும் தற்போது அதன் செயலாளர் ஜெய் ஷாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. கங்குலியும் இவருக்கு கீழ்தான் பணியாற்றுகிறார். ஜெய் ஷா மூலம்தான் கங்குலியை பாஜகவிற்கு இழுக்க அமித் ஷா முயன்று வருகிறார். கங்குலியை மட்டுமின்றி பிசிசிஐக்கு நெருக்கமாக இருக்கும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களை பாஜகவிற்கு இழுக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
கங்குலி
கங்குலியை பாஜக மலைபோல் நம்பி இருந்த நிலையில்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக புராஜெக்ட் கங்குலியை பாஜக கைவிடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பாஜக இன்னும் கங்குலியை விடுவதாக இல்லை. கங்குலியும் வேறு வழி இல்லாமல் இருப்பதாக கூறுகிறார்கள்.
மோட்டோ
கங்குலியை வைத்து தேர்தல் பிரச்சாரத்தை செய்ய பாஜக ஏற்கனவே திட்டங்களை வகுத்துவிட்டது என்றும் கூறுகிறார்கள். சூதாட்ட கறைபடிந்த இந்திய அணியை மீட்டது கங்குலிதான்.. இவர்தான் வங்கத்தையும் மீட்பர் என்று பிரச்சார ஐடியாக்களை பாஜக வகுத்து வைத்து உள்ளன.. கங்குலி இந்த மண்ணின் மைந்தன்.. வலிமையான நபர் என்று பிரச்சாரம் செய்ய பாஜக திட்டமிட்டு இருக்கிறது.
சிக்னல்
கங்குலி ஒரே ஒரு கிரீன் சிக்னல் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆனால் அவருக்கு கிரீன் சிக்னல் கொடுப்பதை தவிர வேறு வழி இல்லை என்கிறார்கள். மார்ச் 7ம் தேதி மேற்கு வங்கத்தின் பிரிகேட் ரோடில் நடக்கும் பிரதமர் மோடியின் பாஜக கூட்டத்தில் கங்குலியை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதில் அவரை கலந்து கொள்ள வைக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன.
வெளிப்படை
கூட்டத்திற்கு கங்குலி வந்தால் மக்களும், நாங்களும் சந்தோசம் அடைவோம்.. ஆனால் கங்குலிதான் இதில் இறுதி முடிவு எடுப்பார் என்று மேற்கு வங்க பாஜக கூறிவிட்டது. வெளியே இப்படி பேசினாலும் உள்ளே கங்குலிக்கு கடும் அழுத்தம் உள்ளது என்கிறார்கள். இதனால் மொத்த மேற்கு வங்க அரசியலும் பிரிகேட் மீட்டிங்கை எதிர்நோக்கி உள்ளது.
மமதா
கங்குலியின் வருகை ஏறக்குறைய உறுதியானதை தொடர்ந்துதான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரியை திரிணாமுல் காங்கிரஸ் அள்ளி உள்ளே போட்டு இருக்கிறது. ''எங்க கிட்டையும் சீப்பு இருக்கு'' என்று மமதா இப்படி கிரிக்கெட் வீரரை களமிறக்கி உள்ளார். அமித் ஷா பெரிதும் நம்பி இருக்கும் கங்குலி களமிறங்கி சிக்ஸர் அடிப்பாரா அல்லது உடல்நிலையை காரணம் காட்டி ரிட்டயர் ஹர்ட் ஆவாரா என்று பார்க்கலாம்!