தாத்ரி படுகொலை: அக்லக் வீட்டில் இருந்தது மட்டன் தான்... பீஃப் அல்ல: ஆய்வில் உறுதி
லக்னோ: உ.பி. மாநிலம் தாத்ரி கிராமத்தில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டதாக படுகொலை செய்யப்பட்ட முதியவர் அக்லக் வீட்டில் இருந்தது ஆட்டிறைச்சிதான் என உத்திரப்பிரதேச அரசின் ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி உத்திரப்பிரதேச மாநிலம், தாத்ரியில் முகமது அக்லக் (52), என்பவரது வீட்டில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிடுவதாக தகவல் பரவியது. அதனைத் தொடர்ந்து அக்லக்கின் வீட்டிற்கு வந்த மர்மகும்பல், அவரையும், அவரது மகனையும் தாக்கினர். இதில் அக்லக் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அக்லக் வீட்டில் கைப்பற்றப்பட்ட இறைச்சி அம்மாநில கால்நடைத் துறையின் ஆய்விற்கும் அனுப்பப்பட்டது.
அந்த ஆய்வு முடிவுகள் இன்று வெளியாகின. அதில், அக்லக் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் இருந்து கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆட்டிறைச்சி தான், மாட்டிறைச்சி அல்ல என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பான அறிக்கை மாநில அரசிடம் அளிக்கப் பட்டுள்ளது.
இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று 3 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் கடந்த வாரம் 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.